திருவனந்தபுரம்:
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது பாஜக ஆட்சி அதிகாரத்தை இழக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் திங்களன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் மேலும் கூறியதாவது:
நாட்டின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது பாஜக ஆட்சி அதிகாரத்தை இழக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்ட பாதுகாக்கும் ஒரு அரசு மத்தியில் அமையும். அத்தகைய திசைவழியில் நாடு சென்றுகொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது முன்னுக்குவரும் புதிய சூழ்நிலையில் கேரள வளர்ச்சியில் அக்கறையுள்ள அனைவரையும் அணிதிரட்டி மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்றத்தக்க தொடர் நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளும் என்றார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் உடனான சந்தித்தது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், மிக முக்கியமான ஒரு சந்திப்பு தான். இன்றைய தேசிய அரசியல் குறித்து அவர் விவாதித்தார். இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காது என்பது அவருடைய கருத்தாக உள்ளது. அப்படியென்றால் மாநில கட்சிகள் மிக முக்கிய மான இடத்தை வகிக்கும். நமது நாட்டின் கடந்த கால அனுபவம் மாநிலங்களுக்கு துரோகம் இழைப்பதாகவே இருந்து வந்துள்ளது. கூட்டாட்சி தத்துவத்துக்கு பொருந்தாத நடவடிக்கைகள் ஏராளமாக இந்த நாட்டில் நடந்துள்ளன. கூட்டாட்சி தத்துவத்தை மதித்து மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத நடவடிக்கைகளை மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு தேவையான பொதுவான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்று சிலவற்றை நாங்கள் விரிவாகவே விவாதித்தோம். பொதுவாக அது எனக்கு சாதகமாகவே பட்டது என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் முக்கியமாக கேரளத்தின் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை தடுத்து நிறுத்தியுள்ள மத்திய அரசின் செயல்பாட்டை முதல்வர் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுவரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியை தடுத்து கேரளத்தை தகர்ப்பது சங்பரிவார் நிகழ்ச்சி நிரல் எனவும், மத்திய அரசுக்கு பாஜக மாநிலத்தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை ரகசியமாக எழுதிய கடிதம் அதை நிரூபிப்பதாகவும் தெரிவித்தார். ஒக்கி புயல், நிபா வைரஸ், பெருவெள்ளம் போன்ற கேரளம் சந்தித்த கடுமையான பாதிப்புகளின்போது மத்திய அரசும், பாஜகவினரும் கடைப்பிடித்த மாற்றாந்தாய் போக்கையும் கேரள முதல்வர் தனது பேட்டியின்போது சுட்டிக்காட்டினார்.