tamilnadu

img

சிகிச்சையின்றி யாருக்கும் சிரமம் ஏற்படக்கூடாது: கேரள முதல்வர்

திருவனந்தபுரம், ஏப். 2- சிகிச்சை கிடைக்காமல் யாருக்கும் சிரமம் ஏற்பட்டுவிடக் கூடாது எனவும், காசர்கோடு மருத்துவக் கல்லூரி நான்கு நாட்களுக்குள் கோவிட் மருத்துவமனையாக மாற்றப்படும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதனன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மாலையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. தேவையின்றி வெளியே நடமாடியது தொடர்பாக 22,338 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,155 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் கூறினார்.

தொடரும் கர்நாடக தடை
மேலும், கேரளத்துக்கு 22,153 வாகனங்கள் சரக்குடன் வந்து சேர்ந்துள்ளன. கர்நாடக சாலைப் பிரச்சனை (மங்களூரிலிருந்து கேரளத்திற்கு வரும் சாலையை கர்நாடக அரசு மண்ணால் மூடி வைத்துள்ளது) நீடித்து வருகிறது. சரக்குகள் நகர்வு உட்பட தடை செய்யப்படுகின்றன. இந்த தடை நீக்கப்பட வேண்டும். 2 லட்சத்து 70 ஆயிரத்து 913 நபர்களுக்கு புதனன்று சமூக சமையலறை மூலம் உணவு வழங்கப்பட்டது. இதில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 607 இலவச உணவாகும். தொண்டர் படைக்கான பதிவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

அதிதி (வெளிமாநில) தொழிலாளர்களில் சிலர் தொழிற்சாலைகளில் வேலை செய்துவிட்டு அங்கேயே தங்கி சாப்பிடுகிறவர்களாவர். சில தொழில் அதிபர்கள் இத்தகைய தொழிலாளர்களை உணவு வேளையில் அரசு முகாம்களுக்கு செல்லுமாறு கூறுகிறார்கள். அது சரியான நடவடிக்கை அல்ல. இதுவரை அவர்களுக்கு அளித்து வந்த வசதிகளை தொழில் அதிபர்கள் தொடர வேண்டும் எனவும்  முதல்வர் குறிப்பிட்டார்.

விஜிலன்ஸ் நடவடிக்கை
பதுக்கல், கள்ளச்சந்தை, அதிக விலைக்கு விற்பனை போன்றவை குறித்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 91 இடங்களில் விஜிலன்ஸ் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை நடவடிக்கைகள் தீவிரமாக தொடரும். போலி மதுபான உற்பத்தி முற்றாக தடுக்கப்படும். போதைக்கு அடிமையானவர்களை போதையிலிருந்து மீட்கும் மையங்களில் சேர்க்க அவர்களது குடும்பத்தினரும் சமூக நல ஊழியர்களும் முன்வர வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார்.
கோவிட் நோய் முற்றாக குணமடைந்தவரை அவரது மனைவி வீட்டிற்குள் அனுமதிக்காத சம்பவம் நடந்தது. அவர் தங்குவதற்கான வசதியை அரசு ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபோன்ற நிகழ்வுகளில் மக்களுக்கு போதிய ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்பதை காண முடிகிறது. தவாறான புரிதல்களுடன் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். அதற்கு மாறான பிரச்சாரங்களை காவல்துறையினர் தடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடலை சரக்கு விமானத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.  கொரோனா தடுப்பில் பணிபுரியும் வலி மற்றும் நோய்த்தடுப்பு தொழிலாளர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும். ரேசன் விற்பனையாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் பல வீடுகளுக்கு செல்லும் உணவு விநியோகிப்பாளர்களுக்கும் காப்பீடு வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம்.

மதவாத அறுவடை முயற்சி        
குற்றப்பின்னணி கொண்டவர்களும் சுயமாக அடையாள அட்டை தயாரித்து கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு தொண்டர் படையாக செயல்படுவதை காண முடிகிறது. இதை தவிர்க்க வேண்டும். தப்ளிக் மாநாட்டில் பங்கேற்ற 60 பேர் மாநிலத்தில் கண்காணிப்பில் உள்ளனர். இதில் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை. நோய் காலத்தில் மதவாத அறுவடை செய்ய யாரையும் அனுமதிக்க முடியாது. கொரோனா வைரஸ் மதம் பார்த்து தாக்குவதில்லை. அனைவரும் எச்சரிக்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முதல்வர் கூறினார்.