tamilnadu

img

கேரளம் ஆச்சரியப்படுத்தியது; அனைவருக்கும் நன்றி இத்தாலியிலிருந்து கொரோனாவுடன் வந்தவர் நெகிழ்ச்சி

திருவனந்தபுரம், மார்ச் 31- கோவிட் என தெரிந்ததும் மனதில் அச்சம் குடிகொண்டது. மருந்தில்லை. சிகிச்சை எப்படி எனத் தெரியாது. தனியாக ஒரு அறையில் இருக்க வேண்டும். ஆனால், கேரளம் என்னை ஆச்சரியப்படுத்தியது. தனிமை வார்டில் தினமும் மருத்துவர் வந்தார். நோயின் தீவிரத்தை விவரித்தார். அச்சம் வேண்டாம் நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்றார். இரண்டே நாட்களில் அச்சத்தை போக்கினார்கள்.     கோவிட் 19 பாதிப்பிலிருந்து மீண்ட கேரள மாநிலம் வெள்ளநாட்டைச் சேர்ந்தவரின் வார்த்தைகள் இவை. கேரளம் தனக்கு ஆச்சரியம் அளிப்பதாகவும், அரசுக்கு தான் கடமைப்பட்டுள்ளதாவும் கூறியவர், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு நன்றியும் தெரிவித்தார்.  மேலும் அவர் கூறுகையில், நல்ல உணவு அளித்தனர். தனியாக இருந்த லேசான சிரமம் மட்டும்தான். படிப்பதற்கு கொஞ்சம் புத்தகங்கள் வேண்டும் எனக் கூறினேன். அன்றைய தினமே புத்தகங்கள் ஒப்படைத்தனர். நோய் இல்லை என்கிற மருத்துவ அறிக்கையின் விவரத்தை மருத்துவரே கூறினார். மிகுந்த மகிழ்ச்சியை அளித்த நிமிடம் அது. நமது நாடு (கேரளம்) மிகவும் முன்னேறியிருக்கிறது. இத்தாலியிலிருந்து ஊருக்கு வந்துள்ளேன். அங்கு 15 நாட்கள் மருத்துவமனையில் படுத்திருந்தால் எவ்வளவு பணம் செலவாகும் என்பது தெரியவில்லை.  நமது கேரளத்தில் உணவும், சிகிச்சையும் எல்லாம் இலவசம். உலக நாடுகளுடன் ஒப்பிட்டால் சுகாதாரத்துறையில் கேரளம் முன்னிலையில் உள்ளது. நமது முதல்வர் பினராயி விஜயன், சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா, ஆஷா ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள்… அனைவருக்கும் மிக்க நன்றி என்றார் அவர். கோவிட் 19 நோய் பாதிப்பிலிருந்து மீண்டாலும் 15 நாட்கள் தனிமையில் இருக்குமாறு சுகாதாரத்துறையினர் பிறப்பித்த உத்தரவின்படி இவர் வெள்ளநாட்டில் உள்ள தனது வீட்டில் கண்காணிப்பில் உள்ளார் .