tamilnadu

img

ஐந்து நட்சத்திர ஓட்டலின் தோற்றத்தில் காட்டன்ஹில் அரசு மேல்நிலைப்பள்ளி கேரள முதல்வர் திறந்து வைத்தார்

திருவனந்தபுரம், ஜுன் 11- ஐந்து நட்சத்திர ஓட்டலின் சாயலில் முன் அலுவலகமும் மேம்பட்ட வசதிகளுடனும் மூன்றடுக்கு கட்டடத்தில் ஆசியாவிலேயே அதிக மாணவிகள் படிக்கும் திருவனந்தபுரம் காட்டன் ஹில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட உள்ளது.  பொதுக்கல்வி பாதுகாப்பு முயற்சியின் ஒரு பகுதியாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்ட டத்தை திங்களன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் காணொலி மூலம் திறந்து வைத்தார். அறிவியல் சூழல்களை மேம்படுத்தும் வகையில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டடம் பயன்பாட்டுக்கு வருவது கற்றல் முறை மேலும் வலுப்பட உதவும் என முதல்வர் கூறினார். நிகழ்ச்சிக்கு கல்வித்துறை அமைச்சர் சி.ரவீந்திரநாத் தலைமை வகித்தார்.  ரூ.17.92 கோடி மதிப்பீட்டில் 2014இல் இந்த பள்ளிக்கான கட்டுமானப்பணிகளை பொதுப் பணித்துறை தொடங்கியது.

கட்டடத்தில் உள்ள 61 அறைகளில் ஹைடெக் ஏற்பாடுகளைக்கொண்ட 28 அறைகள் உள்ளன. சர்வருடன் கூடிய 5 கணினி ஆய்வகங்கள், 150 பேர் அமரத்தக்க கூட்ட அரங்கம், ஆவண அறை, ஆவண காப்பகங்கள், கலைக்கூடம் போன்றவை உள்ளன. முன் அலுவலகம் கொண்ட மாநிலத்தில் உள்ள ஒரே பொதுப் பள்ளி காட்டன்ஹில்.  ஒவ்வொரு தளத்திலும் 20 அறைகள் கொண்ட பொதுக்கழிப்பறைகள் உள்ளன. அவற்றில் உடல் ஊனமுற்றோருக்கு சிறப்பு வசதிகளுடன்கூடிய கழிப்பறைகள் உள்ளன. திருவனந்தபுரம் மாநகராட்சி ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கியுள்ளது. விருதுகள், மாணவிகள் தீட்டிய ஓவியங்கள் அடங்கிய நாளந்தா ஆர்ட் காலரியை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் திறந்து வைத்தார்.    

திருவனந்தபுரத்தின் மையப்பகுதியில் இந்த மகளிர் பள்ளி 9 ஏக்கர் பரப்பளவில் நிழல் தரும் மரங்கள் அடர்ந்த இயற்கை சூழலில் அமைந்து ள்ளது. ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையாக 5 ஆயிரம் மாணவிகள் படிக்கின்றனர். 5 முதல் பத்தாம் வகுப்பு வரை எந்தவித நுழைவுத் தேர்வோ, பரிந்துரையோ இல்லாமல் ரூ.2 மட்டும் செலுத்தி அனுமதி பெற முடியும். 1859இல் துவக்கப்பட்ட இந்த பள்ளி 1997 ஆம் ஆண்டு இ.கே.நாயனார் முதல்வராக இருந்தபோது மாதிரி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது முற்றிலும் ஹைடெக் பள்ளியாக உலகத்தரத்தில் புது வடிவம் பெற்றுள்ளது.