திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் கோட்டயம் சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித் நடேசன் (30). தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். ஆலப்புழை பள்ளிப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் பி.அஞ்சனா(28). இவர் உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் ஐ.டி. நிறுவனமொன்றில் பொறியாளராக உள்ளார். இருவருக்கும் ஏப்.26-ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால், ஊரடங்கு காரணமாக லக்னோவில் இருந்து அஞ்சனா வர முடியவில்லை. இருப்பினும், நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் தீர்மானித்தனர்.
இதையடுத்து இரு குடும்பத்தினரும் ஒரு ஜோதிடரை நாடியுள்ளனர். அவரோ ஏப்.26-ஆம் தேதியை விட்டால் பொருத்தமான, நல்ல தேதி இல்லை என்றும். குறிப்பிட்ட நாளில் பகல் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் திருமணத்தை நடத்திவிடவேண்டுமென கூறியிருக்கிறார்.இதையடுத்து வீடியோ காலில் திருமணத்தை நடத்த இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர். ஏப்.26-ஆம் தேதி கால ஸ்ரீஜித் நடேசன் ஆலப்புழை மாவட்டம் பள்ளிப்பாடுக்கு சென்றுவிட்டார். இதன்படி லக்னோவில் உள்ள அஞ்சனா மணப்பெண் கோலத்திலும், கேரளாவில், ஸ்ரீஜித் மணமகன் கோலத்திலும் மொபைல் போன் முன் அமர்ந்து வாட்ஸ் ஆப் மூலம் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீஜித் , தாலியை மொபைல் போனுக்கு கட்டினார். அஞ்சனா, தன் கையில் இருந்த தாலியை தன் கழுத்தில் கட்டி கொண்டார். அருகில் இருந்த இரு வீட்டாரும், ஆசி வழங்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.