tamilnadu

img

வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்தோர் 1,43,147 பேர்; 52 சதவீதம் பேர் வேலை இழந்தவர்கள்: கேரள முதல்வர்

திருவனந்தபுரம், ஜுலை  2- வெளிநாடுகளில் இருநது இதுவரை கேரளத்துக்கு திரும்பி வந்துள்ள மொத்தம் 1,43,147 பேரில் 52 சதவீதம் பேர் வேலை இழந்தவர்கள் என முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.  புதனன்று கோவிட் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: கேரளத்தில் தொடர்ந்து 13 ஆவது நாளாக நூறுக்கும் அதிகமான கோவிட் 19 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்ட கோழிக்கோடு நடக்காவைச் சேர்ந்த கிருஷ்ணனின் பரிசோதனை முடிவில் அவருக்கு கோவிட் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

அதிகரிக்கும் நோயாளிகள்
ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து புலம்பெயர்ந்தோர் திரும்பி வருவதால், மாநிலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் தொடர்பு மூலம் பரவலும், மரணமும் பெரிதும் அதிகரிக்கவில்லை. வரும் நாட்கள் மிகவும் சவாலானதாக இருக்கலாம். மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் நோய் பரவலைத் தடுக்க தொடர்ந்து போராடுவார்கள் என்று முதல்வர் கூறினார்.
டாக்டர்.பி.சி.ராய் அவர்களின் பிறந்தாள் இந்தியாவின் மருத்துவர் தினமாகும். இன்று, மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களின் தன்னலமற்ற பணிகள் கேரளத்தின் கோவிட் தடுப்புக்கான அடிப்படையாகும். சுகாதாரப் பணியாளர்கள் உலகின் பல பகுதிகளிலும் தங்கள் உயிரைத் தியாகம் செய்கிறார்கள். மனித குலத்தின் ரட்சகர்களுக்கு இந்த தினம் அர்ப்பணம் செய்யப்படுகிறது. கேரளத்தின் சுகாதார ஏற்பாடு உலகத்தரத்தை எட்ட மருத்துவர்களின் பங்கு மகத்தானது. கேரளத்தின் கோவிட் எதிர்ப்பு போராட்டத்திற்கு கிடைத்துள்ள புகழ் மருத்துவர்களுக்கு உரியதாகும். இந்த கொள்ளை நோயை தடுக்க உலக நாடுகளுக்கு உதவுவது அங்குள்ள மலையாளி மருத்தவர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் என்பது பெருமைக்குரியது என்று முதல்வர் கூறினார்.

முகக் கவசம் கட்டாயம்
கேரளத்தில் முகக் கவசம் அணியாத 5373 நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பை மீறிய 15 பேருக்கு எதிராக புதனன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயிலில் வருகிறவர்கள் தனிமை- கண்காணிப்பை புறக்கணிக்க முயற்சிக்கின்றனர்.  கடுமையான முன்னெச்சரிக்கையுடன் இது தடுக்கப்படும். அரசு அலுவலகங்களில் கிருமி நீக்கம் செய்ய குடும்பஸ்ரீ பயன்படுத்தப்படும்.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சமூக பரவல் குறித்த அச்சம் நீங்கவில்லை. அதிக கவனமும் எச்சரிக்கையும் தேவை. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும் இதர நோய்கள் உள்ளவர்களுக்கும் சிறப்பு கவனம் தேவை. கண்காணிப்பில் உள்ளவர்களின் குடும்பங்களின் விவரம் சேகரிக்கப்படும். தேவைக்கு ஏற்ப ஆம்புலன்ஸ் கிடைப்பது  உறுதி செய்யப்படும். எங்கு, தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்கும் என்பது துல்லியமாக உறுதி செய்யப்படும்.

யாருக்கும் தடை இல்லை
மே 7 முதல் 30  வரை 870 விமானங்களும் மூன்று கப்பல்களும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளன. 600  சார்ட்டர்ட் விமானங்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 447 விமானங்களில் 73,000 பேர் வந்தனர்.  விசா காலாவதி முடிந்த 46,753 பேர் வந்துள்ளனர். 1543 விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் விமானங்கள் அனுமதிக்கப்படும். யாருக்கும் மறுப்பு தெரிவிக்கவில்லை. கேரளாவின் பொருளாதார வளர்ச்சியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கேரளத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கை வெளிநாடுகளில் வேலை செய்வோர் அளித்துள்ளனர்.
தனிநபர் வருமானம் அதிகரித்தது புலம்பெயர்ந்தவர்கள் பணம் அனுப்பியதால்தான். 2018 கணக்கெடுப்பின்படி,ரூ.85,000 கோடி வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது இப்போது ஒரு லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, என்.ஆர்.ஐ.க்கள் கேரள வங்கிகளில் ரூ .16,9944 கோடியை முதலீடு செய்துள்ளனர்.

151 பேருக்கு கோவிட்
கேரளத்தில் புதனன்று புதிதாக 151 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. புதனன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 132 பேர் குணமடைந்தனர்  என முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.