tamilnadu

img

கொடி கட்டிப் பறக்கும் ‘நாக் அவுட்’ நாயகன்!

குத்துச்சண்டை என்றால் அது முகமது அலி. அந்த அளவுக்கு கொடி கட்டிப் பறந்தவர். குத்துச்சண்டை களத்தில் மட்டுமல்ல, கருப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்காவில் நிகழ்ந்த கொடுமைகளுக்கு எதிராகவும் போராட்ட களம் கண்டவர். ‘ஹெவி’ வெயிட் சாம்பியன்ஷிப் போட்டியில் 37 முறை எதிரியை நாக் அவுட் செய்து புகழின் உச்சத்தைத் தொட்டவர். அவர் குவித்த வெற்றிகள் ஒவ்வொன்றும் கறுப்பின மக்களிடையே புது எழுச்சியை ஏற்படுத்தின. அவருக்கு பிறகு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஜாம்பவான் மைக்கேல் ஜாக்சன். குடிசைப் பகுதியில் பிறந்து வளர்ந்த இவர் மிக இளம் வயதில் உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தவர். அவரைத் தொடர்ந்து மேவெதர், அமீர்கான் இருவரும் பெயர் சொல்லும் அளவுக்கு உலகம் முழுக்கும் அறிமுகமானார்கள்.

ஒலிம்பிக்கில்...

100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் உயிரற்றுக் கிடந்த குத்துச்சண்டை விளையாட்டுக்கு புத்துயிர் கொடுத்தவர் வரிசையில் மேரிகோம் முதன்மையாகத் திகழ்கிறார். அவருக்கு பிறகு இந்திய குத்துச்சண்டை விளையாட்டின் அடையாளமாக திகழும் விஜேந்தர் சிங். தனது 22-வது வயதில் ஒலிம்பிக் குத்துச் சண்டையில் அவர் வென்ற வெண்கலம்தான் இந்தியா வாங்கிய முதல் பதக்கமாகும். வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்த அவருக்கு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ, ராஜூவ் கேல் ரத்னா விருதுகளும் வழங்கப்பட்டன. நாட்டின் நான்காவது உயர்ந்த குடிமகன் கவுரமும் கிடைத்தது.ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கமும், காமன்வெல்த்தில் வெள்ளிப்பதக்கமும் வென்று வேகமாக வளர்ந்த அவர், அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற வெளிநாட்டு வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் தொழில்முறை குத்துச் சண்டை போட்டிகளில் 2015 ஆம் ஆண்டில் கால்பதித்து தான் பங்கேற்ற 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.தொழில் முறை குத்துச் சண்டை உலகில் 6 முறை ‘நாக் அவுட்’ செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஒரு இளைஞர் என்றால் அது விஜேந்தர் சிங்தான். இதற்காக அவர் வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை சந்தித்திருக்கிறார். அவரது வெற்றி பயணம் பற்றி அலசுவோம்.

ஓட்டுநர் மகன்!

அரியானா மாநிலம் பவானி நகரிலிருந்து ஐந்தாவது கிலோ மீட்டரில் உள்ளது பியவானி மாவட்டம். இம் மாவட்டத்தின் களுவாஸ் கிராமத்தில் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்த மகிபால் சிங் பெனிவால்-கிருஷ்ணா தம்பதிக்கு இரண்டு மகன். மூத்த மகன் மனோஜ் குமார் சிங், இளைய மகன் விஜேந்தர் குமார் சிங் பெனிவால். குடும்பத்தில் வறுமை விரட்டினாலும் விடாப்பிடியாக இரவு-பகல் பார்க்காமல் தூக்கத்தையும் இழந்து வேலை செய்து மகன்களை படிக்க வைத்தார். சொந்த ஊரில் கல்வி பயின்றனர். பின்னர், கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பட்டமும் முடித்தனர்.சிறுவயதிலிருந்தே தனது தாத்தாவிடம் பயிற்சி பெற்ற பேரப் பிள்ளைகள் குத்துச்சண்டை பயிற்சியை முறையாக கற்றுக் கொள்ளலாம் என்றாலும் குடும்பத்தின் வறுமை ஓரங்கட்டியது. குடும்பத்தின் கடன் சுமையை குறைக்க வேண்டும், குத்துச் சண்டையில் ஜெயிக்க வேண்டும் என்பதால் மனோஜ் குமார் ராணுவத்தில் சேர்ந்தார். முதல் மாதம் சம்பளம் வாங்கியதும், தம்பியை பூவானி குத்துச் சண்டை சங்கத்தில் பயிற்சிக்கு சேர்த்து தனது வாழ்க்கையின் லட்சியத்தை அடைந்தார். தீவிர பயிற்சியில் ஈடுபட்ட விஜேந்தர் சிங்கின் அசாதாரண திறமையும் ஆர்வத்தையும் கண்ட தேசிய குத்துச் சண்டை வீரர் ஜேகதீஷின் தானே முன் வந்து பயிற்சி அளித்தார். பின்னர் தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் விளையாட ஊக்கப்படுத்தினார். வெற்றிகளைக் குவித்து வந்த விஜேந்தர் சிங் மிக விரைவில் சர்வதேசப் போட்டிகளில் கால் பதித்தார்.முகமது அலியும், மைக் டைசனும் ‘ரோல்மாடல்’ என்றாலும் “அடிக்க பழுகுவதை விட அடி வாங்க பழகு. அதுவே போட்டியில் வெற்றியைத் தேடிக் கொடுக்கும் என ஊக்கமும்” கொடுத்த தாத்தாவே விஜேந்தருக்கு ‘குரு’. அவரைப் பார்த்து குத்துச் சண்டை கோதாவில் இறங்கியதால், தனது கையுறையை பரிசாக அளித்த தாத்தாவின் ‘பார்முலா’ தான் தொடர்ந்து வெற்றிக்கு தூண்டுதலாக அமைந்துள்ளது.

இழப்புகள் ஏராளம்....

விஜேந்தரின் சொந்த கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கம். ஒலிம்பிக்போட்டியின்போதும் இந்த நிலைமை தொடர்ந்ததால் விஜேந்தரின் சகோதரரர் புதிதாக ஒரு ஜெனரேட்டரை வாங்கிவிட்டார். அன்றைய தினம், முழு கிராமமும் இருளில் மூழ்கியிருந்தாலும் விஜேந்தரின் வீடு மட்டும் ஆர்க் விளக்குகளின் வெளிச்சத்தால் பிரகாசமாக ஜொலித்தது. உறவினர்களும், கிராம இளைஞர்களும் ஒன்று திரண்டு விஜேந்தரின் ஆட்டத்தையும் வெண்கலப் பதக்கம் வாங்குவதையும் பார்த்து உற்சாகமடைந்தனர்.தொழில் முறை போட்டிகளில் விளையாடும் குத்துச்சண்டை வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாது. இதற்காக காவல்துறையின் சிறப்பு டிஎஸ்பி பதவியையும் துறந்த விஜேந்தர், தொழில் முறை குத்துச் சண்டையில் ‘ராக்ஸி பால்’ முறையை பின்பற்றும் விஜேந்தர். ஆசியா பசிபிக் சூப்பர் மிடில் வெயிம் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளார். களத்தில் இறங்கிய முதல் போட்டியிலேயே ‘நாக் அவுட்’ செய்து ஏளனம் பேசியவர்களுக்கு முதல் அடி கொடுத் தார். தன்னை நாக் அவுட் செய்வேன் என்று வீரவசனம் பேசிய தென்கொரிய வீரரை மூன்றாவது சுற்றிலேயே ‘நாக் அவுட்’ செய்து சாதித்து காட்டியவர் விஜேந்தர் சிங். தன்னை வம்புக்கு இழுத்த நட்சத்திர வீரர் அமீர்கானையும் போட்டி களத்தில் சாய்த்தவர். நமது நாடு பரந்து விரிந்த நாடு. பல நகரங்கள், பல தெருக்களில் குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்படுகின்றன. பகலில் ஹோட்டல்களில் வேலை பார்க்கும் ஒருவர் இரவில் திறமையான குத்துச்சண்டை வீரராக மாறிவிடுகிறார். இதுபோன்ற பல சம்பவங்களை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். திறமையான வீரர்கள் இருந்தும் வாழ்க்கையில் ஏழ்மை நிழலாடுவதால் அவர்கள் குத்துச்சண்டையில் இருந்து விலகியே இருக்கின்றனர். வேறு பணிகளுக்குச் சென்று விடுகின்றனர். அவர்களுக்கான அங்கீகாரம் முறையாக கிடைப்பதில்லை. அத்தகையோருக்கு தொழில்முறை போட்டிகள் நல்ல வாய்ப்பாக இருக்கிறது என்பதை என் அனுபவத்தில் கற்றுக் கொண்ட பாடமாகும்.தொழில்முறை போட்டிகளிலும் சரி, சாதாரண போட்டிகளிலும் சரி மனைவி அர்ச்சனா சிங் முன்பு நான் அடி வாங்கியதும் இல்லை. தோற்றதும் இல்லை. அப்படி ஒன்று நடந்து விட்டால் அழுது வடித்தே என்னை நாட் அவுட் செய்துவிடுவார்கள் என்கிறார்.இவரின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம். ஒரு மனிதனின் வெற்றி தேவை பணமோ பதவியோ அல்ல. கடுமையான பயிற்சி, முயற்சி இருந்தால் வெற்றி நம் பக்கம் என்பதை நிரூபித்துக் காட்டியிருக் கிறார். அவரது வெற்றிகள் தொடர வாழ்த்துவோம்.


அரசியல் களம்...

விளையாட்டு பிரபலங்களை கட்சிக்குள் சேர்த்து ஆதாயம் தேடிய பாஜகவின் வலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் சிக்காமல் தப்பினார். அவருடன் தொடக்க வீரராக விளையாடிய கவுதம் காம்பீர் மாட்டிக் கொண்டார். அவரை கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது. அவருக்கு எதிராக முன்னாள் மாநில அமைச்சர் அரவிந்த் சிங் லவ்வியை காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. குத்துச்சண்டை களத்தில் கலக்கி வரும் 33 வயதாகும் விஜேந்தரை தெற்கு தில்லி தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி களம் இறக்கியுள்ளது. முதன் முறையாக தேர்தலில் போட்டியிடும் விஜேந்தர் சிங்கின் குடும்பத்தின் ஏழ்மையும், சமூக அக்கறையும் அரசியல் களத்தை சூடாக்கியிருக்கிறது. அரசியல் களத்தில் ‘பாஜகவை நாக் அவுட்’ வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்பது விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பாகும்.