கிருஷ்ணகிரி, மார்ச் 23- ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலை அருகே உள்ள அபிராமி கார்டன் மேற்கு குடியிருப்பு பகுதியில் 200 வீடுகள் உள்ளன. மேலும் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் 8 ஆண்டுகளுக்கும் முன்பு தார் சாலை அமைக்கப் பட்டது. அந்த சாலை தற்போது கற்கல் பெயர்ந்து குண்டும், குழியுமாக, சிதிலமடைந்து காட்சியளிக்கிறது. இந்த சாலைக்கு வேகத்தடையே தேவையில்லை. அந்த அளவுக்கு மிக மோசமாக இருக்கிறது. இச்சாலை வழியே கனரக வாகனங்கள் செல்வதில்லை. குடிநீர் திட்டத்தில், குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சரி வர மூடாமல் உள்ளது. குழாய் அமைத்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுநாள் வரை தண்ணீர் வரவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ‘மாநகராட்சிக்கு கட்ட வேண்டிய அனைத்து வரிகளும் தவறாமல் கட்டி வருகிறோம். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் கடத்தி வருகிறது’ என அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த பிரச்சனை குறித்து ராயல் ஆர்ச்சடு குடியிருப்போர் நல சங்கத் தலைவரும், மின்வாரிய மத்திய அமைப்பு (சிஐடியு)திட்டத் தலைவருமான சதீஷ்குமார், செயலாளர் அன்னையா ஆகியோர் நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் கூறுகின்றனர். இந்த சாலையை சீரமைத்து கொடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி.ஜி. மூர்த்தி, வாலிபர் சங்க நிர்வாகி கள் சுரேஷ், நாகேஷ்பாபு ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளனர்.