கிருஷ்ணகிரி, அக். 5- கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்த 27 வயது ரகு டெங்கு பாதிப்பால் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். அதே கிராமத்தில் மேலும் பலர் டெங்கு பாதிப்பால் தருமபுரி தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிகப் பட்டுள்ளனர். டெங்குவால் பாதிக்கப்பபட்ட மக்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முருகேசன், சீனிவாசன், சத்தியநாராயணன், வட்டச் செயலாளர் முனியப்பா ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். உத்தனப்பள்ளியில் சுமார் 10 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சுற்றுப்புறத்தில் 28 க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவ்வளவு மக்கள் தொகைக்கும் மருத்துவத்திற்கு இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், 5 படுக்கைகள், 3 ஒப்பந்த ஊழியர்கள் மட்டு உள்ளனர். தேன்கனிக்கோட்டையில் ஆலள்ளியை சேர்ந்த 16 வயது மாணவன் டெங்கு பாதிப்பால் அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு கொன்று சென்றும் காப்பற்ற முடியவில்லை. சூளகிரி வட்டம் சின்ன தியாகரசனப் பள்ளி கிராமத்தின் சந்திரன் மனைவி சாதம்மா டெங்கு பாதித்து அரசு மருத்துவமனையில் மருத்து வசதி இல்லாமல் தேன்கனிக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அவரது மகள் ரம்யா, வள்ளி இருவரும் டெங்கு பாதித்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சகோதரி கதிரியம்மாவும் சில நாட்களில் டெங்கு பாதித்து ஓசூர் தனியார் மருத்துவமனையில் இறந்துள்ளார். அடிப்படை சுகாதார மருத்துவ, வசதிகள் ஏதும் இல்லாத பீதியடைந்துள்ள சின்ன தியாகரசனப் பள்ளியில் இன்னும் பல பேர் டெங்கு, மர்மக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் மகராஜா கடை அம்பேத்கர் தெருவை சேர்ந்த சண்முகத்தின் குழந்தை கார்த்திகா மர்மக் காய்ச்சலுக்கு அரசு மருத்துமனையில் மருத்துவம் பலனளிக்காமல் இறந்துள்ளது. போச்சம்பள்ளி வட்டம் பாப்பாரபட்டி ஊராட்சி பெரிய புளியம்பட்டியில் 50 க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு பாதிப்பால் கிருஷ்ணகிரி, தருமபுரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சின்னராஜ்,, சின்னச்சாமி, சக்தி, மாதலிங்கம் ஆகியோர் கூறியதாவது:- போச்சம்பள்ளி நகரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்வர்களும் சுற்றுப்புற கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில் 90 சதவீதம் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கிறார்கள். அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, ரத்த , சிறுநீர், பரிசோதனைக்குக் கூட வசதியில்லை. பல நேரங்களில் பகலில் மருத்துவர்கள் கூட இருப்பதில்லை என்றனர். மாவட்டம் எங்கும் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று விசாரித்தால் அலுவலர்கள், மருத்துவர்கள், டெங்குவா?அப்படி ஒன்றும் இல்லை என்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் டெங்கு என பதிவது கூட கிடையாது. வருபவர்களை அப்படியே தனியார் மருத்துவமனைக்கு தள்ளி விடுகின்றனர். டெங்கு இல்லை என உண்மைக்கு மாறாக கணக்கு காட்டுகிறார்கள் என்றும் ஏழை மக்களை பாது காக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன் தெரிவித்தார்.