ஐசிசி உயர்மட்ட நடுவர் குழுவிலிருந்து இந்திய நடுவர் எஸ்.ரவி நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட தொடரில் பல நோ-பால்களை நடுவர் எஸ்.ரவி பார்க்கவே இல்லை என்ற புகார்கள் எழுந்தன. ஐபிஎல் கிரிக்கெட்டில் லஷித் மலிங்காவின் நோ-பாலை பார்க்காமல் விட்டது பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்நிலையில், உயர்மட்ட நடுவர் குழுவில் இருந்து எஸ்.ரவி நீக்கப்பட்டுள்ளார். ஆனால், ரவியை நீக்கியதற்கான எந்த வித குறிப்பிட்ட காரணங்களையும் ஐசிசி தெரிவிக்கவில்லை.
உலகக்கோப்பையின் போது இயன் கோல்டு நடுவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதை அடுத்து, இயன் கோல்டு ஓய்வு மற்றும் எஸ்.ரவி வெளியேற்றப்பட்ட நிலையில், புதிய நடுவர்களாக இங்கிலாந்தின் மைக்கேல் காஃப், வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த ஜோயெல் வில்சன் ஆகியோர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மைக்கேல் காஃப் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகள் 59 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 14 டி20 சர்வதேச போட்டிகளில் நடுவர் பணியாற்றி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த வில்சன் 13 டெஸ்ட், 63 ஒருநாள் மற்றும் 26 டி20 சர்வதேசப் போட்டிகளில் அவர் நடுவராக பணியாற்றியுள்ளார்.
தற்போது ஐசிசியின் உயர்மட்ட நடுவர் குழுவில் ஒரு இந்திய நடுவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் அலீம் தார், இலங்கையின் குமார் தர்மசேனா ஆகியோர் நீடிக்கின்றனர்.