tamilnadu

img

உயிரோட்டமான ஆடுகளத்தில் கேதார் ஜாதவ், விஜய் சங்கர் தேவையா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் கம்பீரமாக  நின்று கிரிக்கெட் உலகை மிரட்டி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாகச் செயல்பட்டாலும் ஆடும் லெவன் தேர்வில் வழக்கம் போல சொதப்பி வருகிறது.  கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து ஆகிய 4 நாடுகளில் உள்ள ஆடுகளங்கள் குளிர் சீதோஷ்ண நிலையால் அதிக உயிரோட்டத்துடன் காணப்படும். இந்த வகை ஆடுகளங்களில் விளையாடும் அணி உலக சாம்பியனாக இருந்தாலும் சரி வீரர்கள் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே அந்த அணியால் வெற்றிபெற முடியும்.   நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரும் உயிரோட்ட வகை ஆடுகளத்தில் (இங்கிலாந்து) தான் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடருக்காகக் களமிறங்கிய இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு பிரிவுகளில் எவ்வித பிரச்சனை இல்லாமல் விளையாடி வருகிறது. ஆனால் ஆல்ரவுண்டர் பிரிவில் ஹர்திக் பாண்டியா மட்டுமே தன் வேலையை கவனமாக கையாள்கிறார். கேதார் ஜாதவ், விஜய் சங்கர் (தமிழக வீரர்) பெரிய தலைவலியை ஏற்படுத்துகின்றனர்.  

பேட்டிங்கில் 4-வது வரிசையில் களமிறங்கும் விஜய் சங்கர் பந்தைக் கணிக்காமல் பேட்டை தாறுமாறாகச் சுழற்றி விரைவில் பெவிலியன் திரும்புகிறார்.5-வது வீரராக களமிறங்கும் கேதார் ஜாதவ் டெஸ்ட் போட்டியைப் போல பந்தை வீணடித்து ரன் சேர்க்கிறார். பேட்டிங்கில் இப்படி என்றால் பந்துவீச்சில் கேதார் ஜாதவ் ரெகுலராக வர மாட்டார். வானவில் போல அவ்வப்போது வந்து ஒன்றிரண்டு ஓவர்கள் வீசுவார். விஜய் சங்கர் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தின் போது மட்டுமே பந்து வீசினார். ஆப்கானிஸ்தான், விண்டீஸ் அணிகளுக்கு எதிராக பந்துவீச கேப்டன் கோலி அழைக்கவில்லை.  பீல்டிங்கில் தேவையில்லாமல் இருவரும் டைவ் (பாய்ந்து பிடித்தல்) அடித்து பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வைக்கின்றனர். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் துடிப்பாக செயல்படும் ஜடேஜாவை பெஞ்சில் அமரவைத்துத் மந்தமாக விளையாடும் கேதார் ஜாதவ், விஜய் சங்கர் ஆகியோரை இக்கட்டான சூழ்நிலையில் நம்புவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.  சங்கர், ஜாதவ் பந்துவீச தேவையில்லை என்றால் பேட்டிங்கில் கலக்கும் மற்றொரு தமிழக வீரர் தினேஷ் கார்த்திகை களமிறக்கலாம். அதற்கும் வழி இல்லாமல் போய்விட்டது. புற்கள் அதிகமாக இருக்கும் உயிரோட்டமான ஆடுகளத்தில் துடிப்பான வீரரை பெஞ்சில் அமர வைத்து மந்தமான வீரர்களைக் களமிறக்கிச் சொதப்புவது இந்திய அணியின் மரபாக மாறி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

உயிரோட்டமான ஆடுகளம் என்றால் என்ன?
 

கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் பகுதிகள் சிறப்பு வாய்ந்த களிமண்ணால் (கண்டத்திற்கேற்ப) உருவாக்குபவை. பிட்சின் அமைப்பு ஒரே மாதிரியாக இருந்தாலும் சீதோஷ்ண நிலையால் பிட்ச் வகை மாறுபடும். குளிர் சீதோஷ்ண நிலைக்கு பிட்ச் கடினமாக இருக்கும். இங்கு சாதாரணமாக வீசப்படும் பந்துகள் கூட தாறுமாறாக பவுன்சராக எழும்பும். வெயில் அதிகம் அடித்தால் பிட்ச் பகுதி விரிவடைந்து  மந்தமாக இருக்கும். இவ்வகை ஆடுகளத்தில் ஸ்விங், சுழற்பந்துவீச்சுகள்  நன்கு ஒத்துழைக்கும். கடினமான பிட்ச் வகைகளை உயிரோட்டமான ஆடுகளம் என அழைக்கப்படுகிறது.