கிரிக்கெட் விளையாட்டு என்றால் இங்கிலாந்து மண் தான் சொர்க்கம். ஸ்விங், சுழல், வேகம் என அனைத்து வகையான பந்துவீச்சும் சரிசமமாக எகிறும். சுழற்சி முறையில் மைதானத்தின் தன்மை மாறுபடுவதால் இங்கிலாந்து மைதானங்களை அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் விரும்புவார்கள். ஆனால் 12-வது உலகக்கோப்பை தொடரில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. இங்கிலாந்து நாட்டில் வழக்கத்திற்கு மாறாகக் கால இடைவெளியின்றி மழை பொழிந்துவருகிறது. இதனால் ஆடுகளத்தின் தன்மை அடிக்கடி மாறுகிறது.
பொதுவாகக் காற்றில் ஈரப்பதம் அதிக இருந்தால் பந்துகள் பவுன்சராக எழும்பும். இதனை உயிரோட்டம் உள்ள ஆடுகளம் என்று அழைப்பார்கள். இந்த வகையான ஆடுகளங்கள் இங்கிலாந்து நாட்டில் 2 அல்லது 3 மட்டுமே உள்ளன. ஆனால் தற்போதைய காலநிலை மாறுபாட்டால் அனைத்து ஆடுகளங்களும் திடீரென உயிரோட்டமாக மாறுகின்றன. இங்கிலாந்து மண்ணில் ஷார்ட் பிட்ச் வகை பந்துகள் தொடைக்கு மேல் தான் எகிறும். ஆனால் தற்போது கழுத்து வரை தாறுமாறாக எழும்புகிறது. தென் ஆப்பிரிக்கா வீரர் அம்லா, இந்திய வீரர் ஷிகர் தவான், ஆப்கானிஸ்தான் அணி வீரர் ஷாகிதி ஆகியோர் சிக்கலான முறையில் காய மடைந்துள்ளனர். இதில் தவான் உலகக்கோப்பை தொடரி லிருந்தே விலகியுள்ளார். இன்னும் சில நாட்டு வீரர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாகத் தழும்பின்றி தப்பினர்.
இங்கிலாந்து ஆடுகளங்களின் பொதுவான பண்பு 5 மணிநேரத்தில் உறங்கிவிடும் என்பதாகும். ஆனால் தற்போது 7 மணிநேரம் வரை உறங்காமல் இருப்பதால் சேசிங் செய்யும் அணிகளுக்கு கடும் சிக்கலை உருவாக்குகிறது. காற்றின் ஈரப்பதம் குறைந்தால் தான் ஆடுகளம் சாதாரண நிலைக்கு வரும். வானிலை கைகொடுக்கவில்லையென்றால் பேட்ஸ்மேன்களுக்கு மோசமான பின்விளைவை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.