பிங் பந்து பிரச்சனை காரணமாக இந்திய கிரிக்கெட் அணி மட்டும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், கிரிக்கெட் உலகின் தாதாவும் பிசிசிஐ தலைவருமான கங்குலி இந்தியாவில் டெஸ்ட் போட்டியின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு பச்சை கொடி காட்டினார்.
வங்கதேசத்திற்கான 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 22-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியைப் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய மண்ணில் முதல்முறையாகப் பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்தப்படுவதால், கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தை நேரில் காண வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜெக்தீப் தன்கார், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர், குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி. சிந்து ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கொல்கத்தா டெஸ்ட் போட்டியைக் காண இந்தியா வருவதாக உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.