tamilnadu

குடிநீர் கோரி காலி குடங்களுடன் மறியல்

செங்கல்பட்டு, மே 7-பாலூரில் ஊராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அருகே பாலூரில் ஊராட்சியில் மேலச்சேரி, கரும்பாக்கம், தேவனூர், பாலூர், மணப்பாக்கம் போன்ற கிராமங்கள் உள்ளன. பாலாற்று படுகையில் இருந்து போர் அமைத்து 12 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் அனைத்து பகுதிகளுக்கும் தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், கிராம மக்கள் செங்கல்பட்டு - வாலாஜாபாத் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 5 மாதங்களாக சரியான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அருகில் உள்ள விவசாயக் கிணறுகளில் இருந்து குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. அதிகாரிகளிடம் சொன்னால், போர்வெல் பழுது அடைந்துள்ளது, ஆற்றில் தண்ணீர் இல்லை, போதிய நிதி ஆதாரம் இல்லை, என காரணம் சொல்லி வருகின்றனர். எங்கள் மேலச்சேரி கிராமத்தில் இருந்து பெரிய குழாய் மூலம் பல்லாவரம் நகராட்சிக்கு தினமும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அதே போல் ரயில் குடிநீர் தொழிற்சாலையும் இங்கு உள்ளது. இங்கு தினமும் 5 ஆயிரம் லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை” என்கின்றனர்.இதுபற்றி தகவலறிந்த செங்கல்பட்டு வட்டாட்சியர் சங்கர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் முத்துசுந்தரம், மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாலாற்றில் புதியதாக 4 போர்வெல் அமைத்து, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, திருட்டுத்தனமாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் ஓரிரு தினங்களில் தொடங்கப்படும் என்று ஊராட்சி ஒன்றிய ஆணையர் முத்துசுந்தரம் உறுதி அளித்தார். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.