tamilnadu

img

ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்ட பணியின் மதிப்பு ரூ. 3 லட்சம் கூட பெருமானம் இல்லை

காஞ்சிபுரம், ஜூன் 14- குருவிமலை ஏரியில் 100 நாள் வேலை திட்டத்தில் நடந்த சீரமைப்பு பணி 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணியின் மதிப்பீடு 3 லட்சம் கூட பெருமானம் இராது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் ஒன்றியம் குருவிமலை ஏரி 55 ஏக்கர் பரப்பு உடையது. ஏரி நீரை நம்பி 110 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. ஊராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஏரி பல ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. இதனால், ஏரியின் மதகு, கலங்கல், கால்வாய் மற்றும் கரைப்பகுதி சேதமடைந்திருப்பதாக, விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறி, ஏரியில் சீரமைப்பு பணி மேற்கொள்ள கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் 30லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஏரியில் சீரமைப்பு பணி தொடங்கியது. இத்திட்டத்தில், புதிய மதகுகள், கலங்கல் கட்டுதல், பாசன கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இப்பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றஞ் சாட்டுகின்றனர்.  ஏரியிலிருந்து மதகு வழியாக நீர் வெளியே செல்வதற்கு கால்வாய்கள் அமைக்கப்படவில்லை. ஏரியின் மதகு நீர் செல்ல பாசன கால்வாயில் கான்கிரீட் தடுப்புகள் முழுமையாக கட்டப்படவில்லை. நீரைத் திறந்து விடுவதற்கான ஷாட்டர் என அழைக்கப்படும் திறப்பான் பொருத்தப்படவில்லை.ஏரியில் இருந்து இறங்கி வரும் படிக்கட்டுகள் தரையோடு ஒட்டி நிற்காமல் அந்தரத்தில் நிற்கின்றன.ஏற்கனவே இருந்த கால்வாயை சிமென்ட் பூசியும் ஒப்பேற்றி உள்ளனர் என்று விவசாயிகள் தெரிவித்தனர். பாசன கால்வாய் பகுதியின் பக்கவாட்டில், மண் கொண்டு சரியாக அனைக்கப்படாததால், பக்கவாட்டு மண் சுவர்கள் சரிந்துள்ளன.

ஏரி தண்ணீர் ஏரியில் இருந்து வெளியே செல்லுமா அல்லது வெளியிலிருந்து ஏரிக்குள் வருமா என தெரியாத  வகையில் தரமற்ற முறையில் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. பணம் கொள்ளை அடிப்பதற்காகவே இதை செயல்படுத்தி உள்ளனர். 30 லட்சம் ரூபாய் செலவிட்டதாக கூறப்படும் பணிகள் ரூபாய் 3 லட்சம் கூட மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு மோசமான அளவில் பணிகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினர். பணி நடைபெறும் போதே சில பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று ஆதங்கப்பட்டனர் விவசாயிகள், ஆளுங்கட்சியை சேர்ந்த ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.