சாலை விபத்தில் இருவர் பலி
மாமல்லபுரம், செப்.4- காஞ்சிபுரம் மாவட்டம், வெட்டுவாங்கேணி அருகேயுள்ள சின்ன ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி. இவரது மனைவி தாட்சாயினி (32). இவர், உடன் பிறந்த சகோதரரான பகவதி (19)என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தழுதாலிக்குப்பம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் வெட்டுவாங்கேணி நோக்கி செவ்வாயன்று (செப். 3) இரவு கிழக்கு கடற்கரை சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர தடுப்பில் மோதியது. இதில், பலத்தகாயமடைந்த பகவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த மாமல்லபுரம் காவல்துறை யினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த தாட்சாயினியை மீட்டு பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை நகருக்குள்
ஆம்னி பேருந்துகள் வர தடை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, செப்.4- மதுரை ஆம்னி பேருந்து உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மதுரை நகருக்குள் நாள்தோறும் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை ஆம்னி பேருந்துகள் சென்று வர அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக்கூறி அதற்கு பல்வேறு காரணங்களையும் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை செவ்வாயன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆம்னி பேருந்துகள் மதுரை நகருக்குள் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை சென்று வர அனுமதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்தநிலையில் இந்த வழக்கில் செவ்வாயன்று தீர்ப்பளித்த நீதிபதி அனிதாசுமந்த், ‘பொதுமக்கள், வாக னங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் ஆம்னி பேருந்துகள் நகருக்குள் செல்ல தடை விதித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆம்னி பேருந்துகள் மதுரை நகருக்குள் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை சென்று வரலாம் என கடந்த 2015-ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த இடைக்கால உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.