tamilnadu

அரசின் நலத்திட்டங்களை வழங்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம், நவ. 12-   காஞ்சிபுரம் வட்டம், களியனூர் பகுதியில் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவிகள், உழவர் பாதுகாப்பு திட்டத்தில் திருமணம், ஈமச்சடங்கு, இயற்கை மரணம், கல்வி, முதியோர் உதவித் தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவித் தொகைகள் முறையாக வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது. மேலும் நலத்திட்ட உதவிகளை வழங்கக் கோரி பயனாளிகள் ஜமாபந்தி, மனுநீதி நாள், மக்கள் குறை தீர்க்கும் முகாம், அம்மா திட்டம், முதலமைச்சரின் மக்கள் குறைதீர்க்கும் நாள், உழவர் பாதுகாப்பு திட்ட முகாம்களில் மனுக்கள் வழங்கியுள்ளனர். ஆனால் இதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து நிர்வாகத்திடம் அணுகி கேட்டால், மனுக்கள் காணவில்லை என அலட்சியமாக பதில் கூறுகின்றனர் என பயனாளிகள் தெரிவிக்கின்றனர். அரசின் நலத்திட்டங்களை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  சார்பில்  களியனூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கிளைச்  செயலாளர் ஏ.வடிவுக்கரசி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே.நேரு, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கோவிந்தன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் லாரன்ஸ், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.