செங்கல்பட்டு, அக். 26- காஞ்சி மாவட்டத்தில் வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கு தோட்டக் கலைத் துறை சார்பில் விதைப்பை, உரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் கிராமப்புற வீட்டு காய்கறி உற்பத்தி திட்டத்தின் கீழ் காய்கறி உற்பத்தி செய்வதற்கான விதைகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் பாக்கெட்டுகளாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 100 குடும்பங்களுக்கு ஆடிப்பட்டம் மற்றும் தைப்பட்டங்களில் ஏழு வகையான காய்கறி விதைப் பொட்டலங்கள் வழங்கப்படவுள்ளன. அவரை, பாகற்காய், வெண்டை, முருங்கை, தக்காளி, கொத்தவரை, பூசணி மற்றும் சுரைக்காய், சின்னவெங்காயம் உள்ளிட்ட ரூ. 25 மதிப்புள்ள 7 வகையான காய்கறி விதைப் பைகள், ஒரு கிலோ மக்கிய உரம் மற்றும் காய்கறி வளா்ப்பு முறை திட்ட விளக்க பிரசுரம் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு ஒரு பாக்கெட் வீதம் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஒன்றினை தோட்டக் கலைத் துறை அலுவலகத்தில் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 61 ஆயிரம் பாக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 31,500 பாக்கெட்டுகள் வழங்கப் படவுள்ளது. இதில் இதுவரை 10,600 பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப் பட்டுள்ளது. கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டுத் தோட்டம் அமைக்க விரும்புவோர், தங்களது ஆதார் அட்டை நகலுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவ லகங்களில் தொடா்பு கொண்டு, விதைப்பை, உரம் ஆகியவற்றை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தை பயன்படுத்தி கிராம பகுதிகளில் காய்கறி உற்பத்தியை அதிகப் படுத்துமாறு மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.