tamilnadu

கள்ளக்குறிச்சியில் புறநகர் பேருந்து நிலையம் சட்டமன்றத்தில் அ.பிரபு கோரிக்கை

கள்ளக்குறிச்சி. பிப், 20-  புதிய மாவட்டமாக உருவாகியுள்ள கள்ளக்குறிச்சியில் விரிவடைந்த புறநகர் பேருந்து நிலையமும், கடும் போக்கு வரத்து நெரிசலை குறைத்திட வெளி வட்டச் சாலையும் அமைத்திட வேண்டும் என கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அ.பிரபு சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.  தமிழக சட்டமன்ற பட்ஜெட் விவாத தொடரில் அவர் மேலும் பேசியதாவது:- கள்ளக்குறிச்சி நகரம் முழுவதும் பாதாள சாக்கடை அமைத்திட வேண்டும், அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பொழுதுபோக்குப் பூங்கா, புதிய துணை மின் நிலையம், வட்டார கிளை நூலகம் அமைத்திட வேண்டும், தியாகதுருகத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கவேண்டும், நயினார் பாளையத்தில் தீயணைப்பு நிலையம், சின்னசேலம், தியாகதுருத்தில் விரிவடைந்த பேருந்து நிலையம், கீழ்பரிகத்தில் புதிதாக தடுப்பணை உள்ளிட்டவற்றை அமைத்திட வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தவறுதலாக பதிவை புதுப்பிக்க இயலாமல் விடுபட்டுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் தந்து பதிவை புதுப்பித்திடவேண்டும், விநாய கர் சதுர்த்திக்கு செய்யப்படும் விநாயகர் சிலைகளை ரசாயன கலவையின்றி களிமண்ணால் மட்டும்தான் செய்ய வேண்டும் என சட்டம் கொண்டு வர வேண்டும், கள்ளக்குறிச்சி யில் இருந்து பெரம்பலூருக்கு புதிய பேருந்து வழித்தடம் அமைக்க வேண்டும்,  மணிமுத்தா அணை கட்டும்போது அப்பகுதியில் வசித்த மக்கள் அனைவரும் தியாகதுருகம் ஒன்றியத்தில் வடதொரசலூர் கிராமத்திற்கு குடிமாற்றம் செய்யப்பட்டனர். இன்று வரை அவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.