சண்டிகர்:
விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண்சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்,ஹரியானா வில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, இராஜஸ்தானிலும் விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் கண்டன இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.இதையடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்ட காலமாக இடம்பெற்றிருந்த சிரோமணி அகாலி தளம் கட்சி, அக்கூட்டணியிலிருந்து வெளியேறியது. சண்டிகரில் சனிக்கிழமையன்று நடைபெற்ற சிரோமணி அகாலி தளத்தின் உயர் குழு கூட்டத்தில் ஒருமனதாக இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அதன் தலைவர் சுக்பீர் சிங் பாதல் அறிவித்தார்.“மத்திய அரசாங்கம், முழுமையாக விவசாயிகளின் உணர்வுகளை உதாசீனம் செய்துவிட்டது. வேளாண்மை சம்பந்தமான சட்டமுன்வடிவுகளை அடாவடித்தனமாக கொண்டுவந்திருக்கிறது. மாநிலங்களவை யில் நடந்தது என்ன என்பது அனைவரும் அறிந்ததே. நாங்கள் இந்த அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருந்தபோதிலும், ஹர்சிம்ரத் கவுர் பாதல், இந்தச் சட்டமுன்வடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் பதவியிலிருந்து வெளியேறிவிட்டார். இந்தப் பிரச்சனை தொடர்பாக நாங்கள் மக்களுடனும் கட்சித் தலைவர்களுடனும் விவாதித்தோம். இன்றைய தினம்தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாகத் தீர்மானித்திருக் கிறோம்,” என்று அவர் கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து, சிவ சேனையும், தெலுங்கு தேசக் கட்சியும் வெளியேறிய பின்னர் மூன்றாவதாக இப்போது சிரோமணி அகாலி தளமும் அதிலிருந்து வெளியேறியுள்ளது.சிரோமணி அகாலி தளம் ஆரம்பத்தில் வேளாண் சட்டமுன்வடிவுகளுக்கு ஆதரவாகத்தான் இருந்தது. ஆனாலும் விவசாயிகளின் மத்தியில் இவற்றுக்கு எதிராக கோபாவேசம் அதிகரித்துள்ளதை உணர்ந்துகொண்டு இப்போது தனது முடிவை மாற்றியுள்ளது.விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிப்பதற்கு, சட்டரீதியான உத்தரவாதம் அளித்திட மத்திய அரசு மறுத்துவிட்டது என்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அகாலிதளம் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.இககட்சியின் ஒரே பிரதிநிதியாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தஹர்சிம்ரத் கவுர் பாதல், இச்சட்டமுன்வடிவு களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன் பதவியை ராஜினாமா செய்தார். அவர் இது தொடர்பாக பிரதமருக்கு எழுதியிருந்த ராஜினாமா கடிதத்தில், “விவசாயிகளின் நலன்களுக்கு விரோதமான இச்சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்படும் அரசில் ஓர் அங்கமாக நாங்கள் இருக்க விரும்பவில்லை,” என்று தெரிவித்திருந்தார். (ந.நி.)