போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வகையில், பெங்களூரு போக்குவரத்து போலீசார் ஒரு புதிய முயற்சியை அமல்படுத்து உள்ளனர்.
இந்தியாவில், போக்குவரத்து விதிமீறல்கள் அன்றாடம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வகையில், பெங்களூரு போக்குவரத்து போலீசார் ஒரு புதிய முயற்சியை அமல்படுத்து உள்ளனர். பெங்களூருவின் அத்தனை முக்கியச் சாலைகளிலும் போக்குவரத்துப் போலீஸார் போல் உடை அணிவிக்கப்பட்ட பொம்மைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து பெங்களூரு போக்குவரத்துக் காவல்துறை கூடுதல் ஆணையர் ரவிகாந்த கவுடா கூறுகையில், “பொதுவாக போக்குவரத்து போலீசாரை பார்த்தவுடன் பலர் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதை நான் பார்த்து இருக்கிறேன். எல்லா இடங்களிலும் போலீசாரை நிறுத்த முடியாது. எனவே, போக்குவரத்துப் போலீஸார் போல் உடை அணிவிக்கப்பட்ட பொம்மைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் கொஞ்ச காலத்துக்கு தான் உதவும். அதன் பின்னர் பொம்மைகள் என்பதை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்வார்கள். இதனால் விரைவில் போலீஸ் பொம்மைகள் மீது கேமிராவும் பொருத்த உள்ளோம். ஒரு இடத்தில் 2 அல்லது 3 நாட்களுக்கு மட்டும் பொம்மைகளை நிறுத்தி வைத்துவிட்டு அடுத்து எங்கள் அதிகாரிகளேயே நிற்க வைக்கவும் ஒரு திட்டம் உள்ளது” என்றார்.