பெங்களூரு:
கர்நாடகத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், இந்துத்துவ பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லங்கேஷின் நண்பரும், புகழ்பெற்ற திரைக்கலைஞருமான பிரகாஷ் ராஜ், இந்த படுகொலையால் பெரிதும் உடைந்து போனார்.
அப்போது முதல், இந்துத்துவா பேர்வழிகளுக்கு எதிராகவும், மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராகவும் தனது குரலை உரத்து எழுப்பத் துவங்கிய பிரகாஷ் ராஜ், மோடி அரசுக்கு எதிராக நேரடி அரசியலிலும் இறங்கினார். கர்நாடகத்தின் பெங்களூரு மத்தியத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகவும் போட்டியிட்டார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியவில்லை. தற்போது தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பிரகாஷ் ராஜ் வெறும் 28 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
இத்தொகுதியில் பாஜக வேட்பாளர் பி.சி. மோகன் 6 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில், தனக்கு கிடைத்த தோல்வி குறித்து ட்விட்டரில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ள பிரகாஷ் ராஜ், “என் கன்னத்தில் அறை விழுந்துள்ளது; மேலும் கேலி, இழிவான சொற்கள், அவமானங்கள் எனது பாதையில் வருகின்றன; எனினும், எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருப்பேன்; மதச்சார்பற்ற இந்தியாவுக்கான போராட்டத்தை தொடர்வேன்; இப்போதுதான் கடுமையான பயணம் ஆரம்பித்து உள்ளது; பயணத்தில் என்னோடு இருந்தவர்களுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.