tamilnadu

பிரபல கன்னட எழுத்தாளர் கிரிஷ் கர்னாட் காலமானார்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்த முதுபெரும் நடிகரும் எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் உடல்நலக்குறைவால்  காலமானார். 
கிரிஷ் கர்னாட் தமிழில் ரட்சகன், காதலன், செல்லமே உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகிகளின் தந்தை கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்தவர். மும்பையில் பிறந்த அவர், பத்மஸ்ரீ, பத்ம பூஷன், ஞான பீடம் உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர். மேலும் சிறந்த இயக்கம் திரைக்கதை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் தேசிய விருதையும் வென்றவர் கிரிஷ்கர்னாட்
திரைப்படம் மட்டுமின்றி மேடை நாடகங்களின் மூலமும், திரைக்கதை எழுத்தாளராகவும்  கலைத்துறைக்கு முக்கியப் பங்காற்றிய அவர் உடல்நலக்குறைவால் தனது 81-வது வயதில் பெங்களூருவில் இன்று  காலமானார். பெங்களூரு வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு கன்னட திரைப்பட நட்சத்திரங்கள், எழுத்தாளர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
கடந்த ஆண்டு 'பிரதமர் மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியவர்கள்' எனக் கூறி இடதுசாரி கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் அருண் பெரேரா, வெர்னோன் கொன்சால்வேஸ், டெல்லி சட்டப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுதா பரத்வாஜ், அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான கௌதம் நவ்லகா ஆகியோர் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.  அவர்களை மோடி அரசு அர்பன் நக்சல் என்று முத்திரை குத்தியது. இதைத்தொடர்ந்து கர்நாடகாவில் நடந்த  கௌரி லங்கேஷ் நினைவஞ்சலி கூட்டத்தில் பங்கேற்க வந்த கிரிஷ் கர்னாட் (#metoourbannaxal) `நானும் அர்பன் நக்சல் தான்' என்று எழுதப்பட்ட பெரிய பதாகையைக் கழுத்தில் தொங்க விட்டபடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.