tamilnadu

img

புரோ கபடி தமிழக அணியின் நிலை

ஐபிஎல் தொடரைப் போலக் கபடியிலும் புரோ என்ற பெயரில் பிரீமியர் லீக் (7-வது சீசன்) தொடர் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் போட்டியை விடக் குறுகிய நேரத்தில்   (1 மணிநேரம்) நிறைவு பெறுவதால் இந்த தொடரை ரசிகர்கள் ஆவலுடன் ரசித்து வருகின்றனர். மேலும் கபடி முரட்டுத்தனத்துக்குப் பெயர் பெற்றதால் இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.  தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக அணியான தமிழ் தலைவாஸ் தட்டுத் தடுமாறி புள்ளிகளைக் குவித்து வருகிறது. முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற தலைவாஸ் அடுத்த இரண்டு ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்துச் சொதப்பியது.  இந்நிலையில் ஞாயிறன்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் பலமான ஹரியானா  அணியை 35 - 24 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தித் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதனால் தமிழக ரசிகர்கள் புத்துணர்ச்சியுடன் மீண்டும் கபடிப் போட்டியை ரசிக்கத் தொடங்கி விட்டனர்.  தற்போது தமிழக அணி 12 புள்ளிகளுடன் 7-வது  இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ஜெய்ப்பூர் அணியும் (20), 2-வது இடத்தில் மும்பை அணியும் (17), மூன்றாவது இடத்தில் தில்லி அணியும் (16), 4-வது இடத்தில் குஜராத் அணியும் (15) என நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் வலுவாக உள்ளன. 5 மற்றும் 6-வது இடங்களில் பெங்களூரு (15), பெங்கால் (12)  அணிகள் உள்ளன.  முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் தமிழக அணி தொடர் வெற்றியில் சாதனை படைத்தால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.