நாகர்கோவில், ஜூலை.4- தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில், கடனுதவி வழங்கப்படுகிறது. இக்கடன் பெற, மாவட்ட ஆட்சியர் அலுவலக பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்கள் இணைப் பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பங்களை கட்டணமின்றி பெறலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆசியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பொது காலக்கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம், பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டம், மகளிர் சம்ரிதி யோஜனா, சிறுகடன் திட்டம், கறவை மாடுகள் வாங்க கடன் ஆகிய பிரிவுகளில் இத்தகைய கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறமாயின் ரூபாய் 98 ஆயிரம் மற்றும் நகர்ப்புறமாயின் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சாதி, வருமானம், இருப்பிட சான்றுகள், குடும்ப அட்டையுடன் முன்னிலையில் உள்ள நிறுவனம் ஒன்றில் பெறப்பட்ட விலைப்புள்ளி, திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் அளிக்க வேண்டும். கடன் பெற விதிமுறைகள் மற்றும் கூடுதல் விவரங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் மீது தேர்வுக் குழு உறுப்பினர்கள் பரிசீலனை நடைபெறும். தேர்வாகும் நபர்களுக்கு கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள், ஆவின் நிறுவனம் மூலம் கடன் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.