tamilnadu

img

முதலைகளின் கூடாரமாக மாறிய கிராமங்கள்

கடலூர், செப்.16- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றின் அருகில் உள்ளது கூத்தன் கோயில் கிராமம். வீராணத்திலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரில் அடித்து வரப்பட்ட முதலை ஊருக்குள் புகுந்து வாய்க்காலில் கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு வந்து தேடிய வனத்துறையினரிடம் சிக்கவில்லை.  மறுபுறத்தில், அந்த பகுதி இளை ஞர்களைக் கொண்டு தேடும் பணியும் நடந்தது. அப்போது, மறைந்து இருந்த முதலையை லாவகமாக பிடித்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இவ்வகையான முதலைகள் ஆழ்ந்த நீர்நிலைகளில் மட்டுமே காணப்படும் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். இது சானி முதலையாகும்.  நீர் நிலைகளில் ஆடு, மாடு மற்றும் மனிதர்களை உள்ளுக்குள் இழுத்து புதர்களில் வைத்து அழுகிய பின் உணவாக  உட்கொள்ளும் ரகத்தைச் சார்ந்தது என்றும் வனத்துறையை சார்ந்த  கஜேந்திரன் தெரிவித்தார். இதன் எடை 800 கிலோ முதல் 1000 கிலோ வரை இருக்கும் எனவும் இது பெண் முதலை என்றும் கூறினார்கள். இதுபோன்ற ராட்சத முதலைகளை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. இதை  பத்திரமாக அருகிலுள்ள வக்கிரமாரி  நீர்தேக்கத்தில் விடப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து கூத்தன் கோயில் கிராம இளைஞர்கள் கூறும்போது, “வெள்ளம் மற்றும் தண்ணீர் திறப்பின்போது அடித்து வரப்படும் முதலைகள் கொள்ளிடம் கரை யோரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல நேரங்களில் ஊருக்குள் புகுந்துவிடுகிறது. சில சமயம், வாய்க்கால் தண்ணீரில் இறங்கும் ஆடு, மாடு மற்றும் ஆட்களையும் கடித்து இழுத்துச் சென்றுள்ளது. எனவே இந்த பகுதியில் முதலை பண்ணை அமைத்து இந்த பகுதி யில் உள்ள முதலைகளை பாதுகாக்க வேண்டும்” என்றனர்.