tamilnadu

img

மனித நேயம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கு! கீழே கிடந்த நகைகளை ஒப்படைத்த தம்பதி

சிதம்பரம், டிச. 24- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வண்டிகேட் பகுதியை சேர்ந்தவர் மோதிஅலி. இவர் தன் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சிதம்பரத்திலுள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்கள் கை பையில் வைத்திருந்த 10 சவரன் நகைகள் கீழே விழுந்துள்ளது. வீட்டிற்கு வந்து பார்த்தபோது நகை பை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் வந்த வழியில் தேடியும் நகை கிடைக்காததால் இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றனர். இந்நிலையில் சிதம்பரம் அருகே உள்ள ஆதிவராக நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஷபீர் அகமது என்பவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சிதம்பரத்திலிருந்து அவர்களது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது, பைசல் மஹால் திருமண மண்டபம் அருகே சாலையில் சிதறிக் கிடந்த நகைகளை எடுத்து சிதம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். சிதம்பரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமை யில் உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் மற்றும் காவல்துறையினர் நகைகளை பெற்றுக்கொண்டு இது தொலைத்தவரின் நகைகள்தானா என்பதை விசாரணை நடத்தி, உரியவரிடம் ஒப்படைத்தனர். மேலும் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஷபீர் அகமதுவை காவல் துறையினரும், பொதுமக்களும் பாராட்டினர்.