tamilnadu

கடலூருக்கு கூடுதலாக பரிசோதனை இயந்திரங்கள்: சிபிஎம் கோரிக்கை

சிதம்பரம், ஜூன் 29- கொரானா தொற்று  நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு பரிசோதனைக்காகக் கூடுதல் பிசிஆர் டெஸ்ட் கிட் வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம்  வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கொரோனா கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பொதுவான வியாதிகளுக்கு சிகிச்சை பெறச் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்ய வேண்டும்.  மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பரவலாக பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்திற்குக் கூடுதலாக இரண்டு பரிசோதனை இயந்திரங்களை வழங்க வேண்டும், தகவல் சேகரிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்கவும், தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்,  கடனை செலுத்தக் கட்டாயப்படுத்தும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து ஊரடங்கால் பாதித்த விவசாயிகளைக் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும். குடி மராமத்து பணிகளை முறைப்படுத்த வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் தேவையான விவசாயக் கடன்களை உடனுக்குடன் அளிக்க வேண்டும், ரேஷன் கடைகள் மூலம் முகக் கவசம், சானிடைசர், கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவற்றை  இலவசமாக வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.