கடலூர்:
தலித் ஊராட்சி மன்றத்தின் தலைவர் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு அக்டோபர் 15 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது:
தலித் அல்லாத ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டி வந்துள்ள தகவலை அறிந்ததும் போராட்டம் நடத்துவதற்கு தயாராகி வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப் பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று ஊராட்சி மன்ற செயலர், வார்டு உறுப்பினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள் ளதை வரவேற்கிறோம்.மேலும் முக்கிய குற்றவாளியான துணைத்தலைவர் தலைமறைவாகி உள்ளார் அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.தெற்கு திட்டை ஊராட்சி மக்கள் நலப் பணித் திட்ட பணிகள் தொய்வு பெறாமல் நடைபெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் நேரிடையாக தலையிடுவதுடன் ஆட்சிமன்ற தலைவருக்கு கூடுதல் அதிகாரமும் போதுமான நிதியை வழங்க வேண்டும்.மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி ஊராட்சிமன்றத் தலைவரை இருக்கையில் அமர வைக்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 15ஆம் தேதி சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்கின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சமூக நீதி மண்ணில் அவமானம்: கி.வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில்,“கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட சமூகச் சகோதரி ராஜேஸ்வரி என்பவர் ஊராட்சித் தலைவரான பிறகும்கூட, கூட்டம் நடைபெறும் போது அவரைத் தரையில் உட்கார வைத்து அவமானப் படுத்தியுள்ளது நம் நாடு இன்னமும் சமூக விடுதலை - சமத்துவம் பெறாத நிலையிலுள்ளது என்பதைத்தானே காட்டுகிறது” என்றும் கூறியுள்ளார்.“தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது. அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும் அது குற்றம்“ என்று அரசியலமைப்புச் சட்டம் 17ஆவது விதி கூறுவதும், அதன்மீது பிரமாணம் எடுப்பதும், எல்லாம் வெறும் சடங்கு சம்பிரதாயங்கள்தானா? என கேள்வி எழுப்பியுள்ளார்.இதுவே தொடர் கதையாகக் கூடும். உடனடியாக தமிழ்நாடு முதல்வர் தனிக் கவனம் செலுத்தி சட்ட ரீதியில் நடவடிக்கை எடுத்து, சமத்துவம், சகோதரத்துவம் நிரந்தரமாகவும், போதிய சட்டப் பாதுகாப்புள்ள நடைமுறைகள் நிலவவும் உறுதி அளிக்க வேண்டும் என்றும் வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரென்ன மண்புழுவா?:
கவிஞர் வைரமுத்து
தனது ட்விட்டர் பக்கத்தில் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டிருப்பது வருமாறு:-“பட்டியலினத்துத் தாயொருத்தி தரையில் வீசப்படுவதா? அவரென்ன மண்புழுவா? தலைவியாய்க் கூட அல்ல... மனுஷியாய் மதிக்க வேண்டாமா? என் வெட்கத்தில் துக்கம் குமிழியிடுகிறது. தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க வேண்டிய துயரங்களுள் இதுவும் ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சதீஷ் கண்டனம்
நடிகர் சதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில். “சாதியைக் காட்டி ஒரு ஊராட்சித் தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமர வைத்த அவலம் கண்டிக்கத்தக்க கொடூர செயல். என்னால் சமூகத்தை மாற்ற முடியுமோ இல்லையோ நான் என் வாழ்வில் இத்தவறை செய்ய மாட்டேன். தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். அனைவரும் சமம்” என்று கூறியுள்ளார்.