tamilnadu

img

கடலூரில் ஆலோசனை கூட்டம்

கடலூர், மே 6-கடலூரில் அனைத்து சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் கலந்து கொண்டன.என்எல்சி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வேலை வாய்ப்பில் கடலூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், என்எல்சி-யில் அப்ரண்டிஸ் முடித்தோர், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர், பணியின் போது உயிரிழந்தோர் வாரிசுகளுக்கு வேலை கொடுக்க வேண்டும். சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். அவர்கள் நிரந்தரம் செய்யும் வரை சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். என்எல்சி நிறுவனத்தில் சிஎஸ்ஆர் நிதியினை நெய்வேலியை சுற்றியுள்ள கிராமங்களில் மக்கள் வாழ்வாதாரத்திற்கும், கடலூர் மாவட்ட மேம்பாட்டிற்கும் பயன்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை பறிக்கும் அவுட் சோர்சிங் கம்பெனிகளை வெளியேற்றி உள் ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும். நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், வேலைவாய்ப்பு மாற்று இடம், மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்க கருத்தரங்கம் நெய்வேலியில் மே 10 ஆம் தேதி நடத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது. இதில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பி.கருப்பையன், ஜி.பாஸ்கரன்(சிஐடியு), எஸ்.பிரகாஷ், எஸ்.கே.ஏழுமலை (விதொச), பி.தேன்மொழி,முத்துலட்சுமி (மாதர் சங்கம்), டி.கிருஷ்ணன், என்ஆர்ஜி.லெனின் (வாலிபர் சங்கம்), குமரவேல், சின்னத்தம்பி (மாணவர் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.