திருவனந்தபுரம், ஏப்.16- கேரளத்திற்கு புதன் கிழமை ஆறுதல் அளிக்கும் தினமாக அமைந்தது. ஒருவர் மட்டுமே கொரோனா பாதிப்புக்கு உள்ளானதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் புதனன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மேலும் கூறியதாவது: கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நெருங்கிய தொடர்பால் கொரோனா தொற்றியுள்ளது. காசர்கோடு- 4, கோழிக்கோடு- 2, கொல்லம்-1 என ஏழு நபர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டனர். இதுவரை கேரளத்தில் 218 நபர்கள் முழுமையாக நோயின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளனர். மிக அதிக அளவில் (220) நோயிலிருந்து விடுபட்டவர்கள் கேரளத்திலிருந்துதான். மொத்தம் 387 பேர் பாதிக்கப்பட்டனர், அதில் 167 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 97,464 என ஒரு லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. அதில் மருத்துவமனை கண்காணிப்பில் 522 பேர் உள்ளதாகவும் முதல்வர் கூறினார்.
22 புற்றுநோய் மையங்கள்
புற்றுநோயாளிகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. அவர்களுக்கு எளிதில் கொரோனா நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அவர்கள் சிகிச்சைக்காக நெடுந்தூரம் பயணம் செய்வதை தவிர்க்கும் பொருட்டு மாவட்டங்களில் 22 சிறப்பு சிகிச்சை மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. இத்தகைய மையங்கள் அமைக்கப்படுவது நாட்டிலேயே முதலாவது என முதல்வர் கூறினார்.