ஒடிசாவில் மது எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவில் சமூக ஆர்வலர் அபிமன்யூ பாண்டா (வயது 48) காந்தல்மால் மாவட்டம் பலிடா பகுதியில் வசித்து வந்தார். இவர் மது ஒழிப்பு போராட்டத்தில் தீவிர மாக ஈடுபட்டு வந்ததால் மது வியாபாரிகள் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் தனது வீட்டின் முன்பு அபிமன்யூ பாண்டா நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவரை சரமாரியாக சுட்டனர்.
இதில் அபிமன்யூ அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உயிருக்கு போராடிய அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஒடிசா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.