நீதிமன்றமும் அரசும் விளக்குமா? தீண்டாமை ஒழிப்பு முன்னணி கேள்வி
சென்னை, ஜுன் 22- உடுமலை சங்கர் சாதி ஆணவப் படுகொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான சின்னச்சாமி விடுவிக்கப்பட்டிருப்பது எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளன.
இத்தீர்ப்பு தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லகண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ் விடுத்துள்ள அறிக்கையில், “கவுசல்யாவின் தந்தை சின்னசாமி குற்றவாளி இல்லை எனில், சங்கர் ஏன் கொல்லப்பட்டார் என்பதை நீதிமன்றம்தான் விளக்க வேண்டும்; தற்போது தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ள கொலையாளி களுக்கும் சங்கருக்கும் என்ன தொடர்பு என்ற கேள்விக்கு பதிலே சின்னசாமி என்பவர்தானே; சாதாரண மனிதர்களுக்குத் தெரியும் இந்த நீதி, நீதி பரிபாலன அமைப்பில் நிரூபிக்கப்படாமல் போனது ஏனோ என்பதற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர். தீர்ப்பை மேல்முறையீடு செய்திட வலியுறுத்தி இன்று (ஜுன் 23) காலை 10.30 மணியளவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்; அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் மேல்முறையீட்டை வலியுறுத்தி மனு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், “ கூலிப்படையால் சங்கர் படுகொலை செய்யப்பட்டா லும் அதற்கு காரணமானவர்கள் கவுசல்யாவின் பெற்றோர்களே என்பதற்கு கவுசல்யாவின் சாட்சியமே முக்கிய ஆதாரமாக இருக்கிறது; அந்தப் பெற் றோருக்கே இவ்வழக்கில் தொடர்பில்லை என்று விடுவிக்கப்படுகிறார்கள் என்றால், சங்கர் படுகொலை செய்யப்பட்டதன் அடிப்படையே கேள்விக்கு உள்ளாகிறது; இத்தீர்ப்பு சட்டம் கொடுத்த ஜனநாயக உரிமையையும், பாது காப்பையும் நம்பி தனது வாழ்க்கை இணையை தேர்வு செய்யும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது” என்று கூறியுள்ளனர். தமிழகத்தில் இந்த ஊரடங்கு காலத்தில் மட்டும் நான்கு சாதி ஆணவப் படுகொலைகள் பதிவாகியுள்ள நிலையில், அவற்றைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.