(சாந்துக்குப் பதில், சுவரில்
சாதி பூசி இருந்ததை
எதைப்பூசி மறைப்பீர்கள்?--வெண்புறா )
இவர்கள்
செருப்பு தைப்பவர்கள்
செருப்பை விட சீக்கிரம்
தேய்பவர்கள்; மாய்பவர்கள் .
அவர்கள்
உறங்கும் போதும்
கிரீடம் கழற்றாத
உப்பரிகை வாசிகள்.
இடையில்
காற்றை மறித்து, கனவை மறித்து
கட்டிய சுவர்.
இடிந்து விழுந்ததா அது?
இல்லவே இல்லை.
சீனச் சுவர் கூட
சிதிலம் அடையும்.
இந்தச் சுவருக்கு
ஏது இடிபாடு?
(இடிந்தாலும் இவர்கள் மேல்
இப்பால் தான் விழும்
அவர்கள் மேல்அப்பால் விழாது)
இமயம் முதல் குமரிவரை
இதயம் முதல் இமைகள் வரை
நீண்டு கிடக்கும் நெடுஞ்சுவர்.
செங்கற்களுக்கு இடையில்
சிமெண்ட் நிரவி
கோபங்களுக்கு இடையில்
குரூரம் விரவி
கட்டிய சுவர்.
இப்பால் இருப்பவர்கள்
இராமனின் செருப்பையும்
தைத்தவர்கள்.
இவர்களுக்கு சிம்மாசனம்
இல்லை எனினும்
இவர்கள் தைத்த செருப்பு
அரியணை ஏறியமைக்கு இவர்கள்
அகமும் முகமும் மகிழலாம் அல்லவா?
இவர்கள்
காசு வருவதாய் அல்ல
கஞ்சி வருவதாய்
கனவு காண்பவர்கள்.
அவர்கள்... அவர்கள்....
செல்ல நாய் கழுத்தில்
தங்கப் பட்டை அணிந்து
அழகு பார்க்கும்
அழகியல் வாதிகள்.
இவர்களுக்கும் அவர்களுக்கும்
இடையில் இந்த சுவர்.
"நெற்கொண்டு போம் அளவும்
நில்லாய் நெடுஞ் சுவரே"
என்ற கம்பன்
"கற்குன்றம் போல் நின்றாய்
கவிழ்வாய் கொடுஞ் சுவரே" என
வசைக் கவிபாடினாலும்
அதைச் செவிசாய்க்காத சுவர்.
தேநீர்க் கடைகளில்
கோப்பைக்கும் கோப்பைக்கும்
குறுக்கே -
சவரக் கடைகளில்
மயிருக்கும் மயிருக்கும்
நடுவே
ஓங்குதாங்கான இந்தச் சுவர்.
இணையும் ஜோடிகளின்
இதழ்களுக்கு இடையில்
முத்தங்களை நசுக்கிக் கொண்டும்
ரத்தங்களை அணிந்துகொண்டும்
ஊடறத்துச் செல்கிறது சுவர்.
மழையில் விழுந்தாலும்
மறுபடி எழுந்திவர்கள்
உலையில் விழுந்து
உணவில் விழுந்து
உணர்வில் விழுந்து
மீண்டும் நிமிர்கிறது சுவர்.
அவர்கள்.... அவர்கள்... படைக்கும்
அகண்ட பாரத வான் மேல்
அந்தரச் சொர்க்க வாசலில்
அவர்களை வரவேற்க
ஆண்டவன் அங்கே
வருக வருக என
வரவேற்பு வளைவு கட்டி
காமதேனு பால் குடத்தை
கக்கத்தில் இடுக்கியபடி காத்திருப்பார்.
சொர்க்கம் வரை நீளும் இச்சுவர்
இவர்களை மட்டும் உள்ளே
ஏக விடாமல் வாசலை மறிக்கும்
ஆண்டவனின் புஷ்பக விமானம்
வாடகைக்கும் இவர்களுக்கு வாய்க்காது.
சொர்க்கக் கதவை இவர்கள்
தப்பித்தவறி தட்டினால்
ஒட்டக்கூத்தன் கதவாய்
ரட்டைத் தாழ்ப்பாள் இட்டுக்கொள்ளும்.
ஆனால்.... ஆனால்.....
கோட்டை வாசிகள் கூறுகிறார்கள்
சமத்துவம் இவர்களுக்கும்
சரிவிகிதத்தில் எடை போட்டு
தரப்படுகிறதாம்.
மறுப்பதற்கில்லை; ஏன் எனில்
ஓங்குமிந்த சுவர் தாண்டி
ஓரமாய் இவர்களும்
ஒண்டியபடி நுழையலாம்....'
அங்கே அவர்களின்
மலக்குழியில் மலம் எடுக்க....
பிணமாகி அதில் படுக்க... .