ஓ. பன்னீர்செல்வம் தகவல்
சென்னை, செப். 9 - தமிழகத்தில் வீட்டு வசதி வாரியம் மூலம் தனியாருக்கு நிகராக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். திருவேற்காட்டில் தனியார் நிறுவனம் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கிளப் ஹவுஸ் திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இது வரை வீட்டு வசதி வாரியம் மூலம் 13 லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ரயில்வே துறை தேர்வுகளை தமிழில் நடத்த அதிமுக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.