tamilnadu

img

எழுச்சி பெற்ற ரயில்வே ஊழியர் கிளர்ச்சி - கே.அனந்தன் நம்பியார்

...நேற்றைய தொடர்ச்சி...

ரயில்வேக்களில் இன்றுள்ள நிலைமையில் அபிவிருத்தி செய்வதன் பொருட்டு ரயில்வே ஊழியர்கள் சார்பில் பல திட்டவட்டமான ஆலோசனைகள் ரயில்வே இலாகாவிற்கு அனுப்பப்பட்டன. ஒவ்வொரு மட்டத்திலும் ரயில்வே ஊழியர்களின் பிரதிநிதிகளையும், அதிகாரிகளையும் கொண்ட கூட்டுக் கமிட்டிகள் நிறுவவேண்டுமென்பது இந்த ஆலோசனைகளில் ஒன்று. லோக்கோ ஷெட், ஒர்க்சாப், மார்ஷலிங் யார்டு, ரயில்வே ஜங்ஷன், ஸ்டேஷன்கள் ஆகிய இவற்றில் எல்லாம் இக்கூட்டுக் கமிட்டிகள் அமைக்கப்பட்டு திட்ட வெற்றிக்குச் சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; அன்றாட வேலைக் கஷ்டங்களையும், போக்கு வரத்து நெரிசல்களையும், தளவாடப் பற்றாக்குறைகளையும், இம்மாதிரி விஷயங்களையும் கூடிப்பேசி விவாதித்து அவற்றிற்குத் தீர்வுகாண வேண்டும் என்பதே கூட்டுக் கமிட்டிகளின் நோக்கம் ஆகும். 

இது அமல்நடத்தப்பட்டால் அதிகாரவர்க்கத்தின் ஆதிக்கம் தலைதூக்காது தடுக்கமுடியும்;நிர்வாக வேலையில் அனாவசியத் தாமதம் ஏற்படுவதைத் தடுக்க முடியும்; ஊழியர்களிடையே அக்கறையும், வேலையில் ஆர்வமும் ஏற்படும். இந்த கூட்டுக் கமிட்டி ஆலோசனை கோட்பாட்டளவில் ஒத்துக்கொள்ளப்பட்டது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது ரயில்வே மந்திரி ஜகஜீவன்ராம் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டார். ஆனால் இது இன்றுவரை அமல் நடத்தப்படக் காணோம். 

நாட்டு மக்களின் விருப்பம்

ரயில்வேயில் எங்கு பார்த்தாலும் லஞ்சமும், உழலும்  தலைவிரித்தாடுகின்றன. இந்த முறைகேடான பழக்கங்கள், ரயில்வே அமைப்பை, உள்ளிருந்தே கொல்லும் வியாதி போன்றதாகும். மேலே கூறப்பட்ட கூட்டுக் கமிட்டிகள் ஏற்பட்டு அவை சரிவர இயங்குமானால் இந்த லஞ்சஊழல் துர்ப்பழக்கங்களைக் களைந்தெறிவது சாத்தியமாகும்.  மேலும், தொழிற்சங்கங்கள் இஷ்டப் பூர்வமாக இயங்க அனுமதிக்கப்பட்டு அவற்றின் ஒத்துழைப்புடன் இத்தீய பழக்கங்களை ஒழித்துக் கட்டுவது சாத்தியமாகும். நம் நாட்டில் சோஷலிச சமுதாயத்தை நிர்மாணிக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகின்றனர். ஆனால் இந்த நாட்டிலுள்ள பிற்போக்கு சக்திகளும், பழைமை விரும்பிகளும் இந்த விருப்பத்திற்கு எதிராகச் செயலாற்றி வருகின்றனர்.

சம்பளத்தில் ஏற்றத்தாழ்வு

ரயில்வே ஊழியர்கள் பெரும்பாலோருக்குக் கொடுக்கப்பட்டு வரும் சம்பளம் மிகக் குறைவானதே, குறைந்த சம்பளம் பெறுவோருக்கும் உயர்ந்த சம்பளம் பெறுவோருக்கும் உள்ள இடைவெளி பெரிது, ஒரு சாதாரண தொழிலாளியின் மாதச் சம்பளம் ரூ.75 , ஆனால் உயர் அதிகாரியின் சம்பளம் மாதத்திற்கு ரூ.4,000 ஆகும். இதுவன்றி, உயர் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச ஆடம்பரச் சலுகைகளும் வசதிகளும் ஏராளம். குறைந்தபட்ச சம்பளத்தைவிட, உயர்ந்தபட்ச சம்பளம் 50 பங்கு அதிகம் உள்ளது.
1947 ஜனவரிக்குப் பின் ஏற்பட்ட சம்பள மாற்றத்திற்கும் பிறகும் இவர்கள் வறுமைநிலை நீங்கியபாடில்லை. சம்பள உயர்வுக்கோரிக்கையை ரயில்வே ஊழியர்கள் முன்வைத்துள்ளதற்குக் காரணம் இதுவே.

சம்பள விகிதங்கள் மாற்றப்பட வேண்டும் என்று ரயில்வே ஊழியர்கள்  செய்துவரும் கிளர்ச்சியை இந்தப் பின்னணியில் இருந்துகொண்டு பரிசீலிக்க வேண்டும். இரண்டாவது சம்பளக்கமிஷன்தனது அறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டது. கணிசமான சம்பள உயர்வோ, பஞ்சப்படி உயர்வோ கமிஷன் சிபாரிசில் இல்லையென்றே தெரியவருகிறது. பத்திரிகைச் செய்திப்படி ஏதோ ரூ.5 சம்பள உயர்வு   இருக்கலாம் என்று அறிகிறோம். இது உண்மையானால், ஊழியர்கள் மத்தியில் பெருத்த அதிருப்தி ஏற்படும் என்பதில் ஐயமில்லை. ரயில்வே ஊழியர்களிடையே அதிருப்தி வளருவதன் காரணமாக, நிர்வாகத் திறமை மேலும் சீர்கெடத்தான் செய்யும். சம்பளக் கமிஷன் அறிக்கையைப் பரிசீலனை செய்யும்போது அரசாங்கம் இதை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ரயில்வேக்கள் திறமையாக நடத்தப்பட வேண்டும். நாடு முழுவதும் நல்ல செம்மையான சாலைகள் அமைக்கப்பட வேண்டும். சாலைகளும், ரயில்வேக்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படவேண்டும் என்றே நாட்டுமக்கள் கருதுகிறார்கள். சாலைப் போக்குவரத்து ரயில்வேக்களுக்கு ஒன்றும் போட்டியாக வரமுடியாது. போக்குவரத்துக்குள்ள நெருக்கடி அவ்வளவு அதிகமாக இருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றுள்ள ரயில்வே நிர்வாகத்தின் திறமைக் குறைவால் ரயில் மிகத் தாமதமாக வருகிறது; பெரும் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டியது அவசரத் தேவையாக உள்ள இன்றைய நிலையில், இத்தகைய திறமையின்மையும், தாமதமும், விபத்துக்களும் ரயில் போக்குவரத்தையே சீர்குலைக்கின்றன. இச்சீர்குலைவைக் களைவதெப்படி? ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டிய பிரச்சனையிது. இச்சீர்குலைவைத்  தடுப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டுமென்பதே நாட்டு மக்கள் அனைவரின் நாட்டம்.