tamilnadu

img

மடியற்ற தாயாய் நீரற்ற நிலங்கள் : காயும் கரும்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம்,  உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிட்ட கரும்பில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நீரின்றி காய்ந்ததால் விவசாயிகள் வேதனையின் விளிம்பில் வாடுகின்றனர்.  இதை விட கொடுமையாக சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் காய்ந்த கரும்பில் கால்நடைகளை விட்டு மேய்க்கும் அவலமும் நிகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் அதிக கரும்பு உற்பத்தி உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி (3), உளுந்தூர்பேட்டை(1) திருக்கோவிலூர் (1) முண்டியம்பாக்கம்(1), செஞ்சி(1) என 8 சர்க்கரை ஆலைகள் உள்ளன. சுமார் ஒரு லட்சம் ஏக்கர் அளவிற்கு கரும்பு பயிரிடப்படும் பரப்பு உள்ளது. மாவட்டத்தில் பெரும் விவசாயமாக நெல்லுக்கு அடுத்து கரும்பு விவசாயம் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டும்,  இந்த ஆண்டும் வானம் பொய்த்து  பருவமழை பெய்யாததால் நெல்,  கரும்பு உள்ளிட்ட அனைத்து விவசாயப் பயிர்களும் மாவட்டத்தின் பெரும் பகுதியில் காய்ந்து கருகி கொண்டுள்ளன.

கால் நடைகளுக்கு தீனி...

கள்ளக்குறிச்சியில் உள்ள கே1 எனப்படும் மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை எல்லைக்குட்பட்ட பரப்பில் பயிரிட்ட கரும்பில் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேல்  தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகிவிட்டது. இதில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பட்டுப் போய்விட்டது. இக்கரும்பு எந்த விதத்திலும் பயன்படாது என்ற நிலையில் கால்நடைகளை விட்டு மேயவிடும் மிகக் கொடுமையான அவல நிலையை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

கசக்கும் கரும்பு...
கே 2 எனப்படும் கச்சராப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இதேபோல 2000 ஏக்கருக்கு மேல் கரும்பு காய்ந்து போய் உள்ளது. கோமுகி அணையின் துணை சற்று இருந்ததால் காயம் கரும்பின் அளவு இங்கு சற்று குறைந்து இருக்கிறது. இதேபோல பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை இந்த ஆண்டு 12,500 ஏக்கர் என்கிற அளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இதில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தண்ணீர் இன்றி வெப்பத்தால் கரும்பு காய்ந்து போய் உள்ளது. திருக்கோவிலூரில் உள்ள சென்னை சுகர்ஸ் தனியார் சர்க்கரை ஆலை, தியாகதுருகம் தரணி ஆலை ஆகிய ஆலைகளின் கரும்பு பரப்புகளிலும் தண்ணீர்ப் பிரச்சினையால் கரும்பு காயும் நிலையில் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இந்த ஆலைகளில் பயிரிட்ட கரும்புகளிலும் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கரும்பு காய்ந்து கொண்டுள்ளது.

பட்டுப்போன வாழ்க்கை...
 

இந்நிலையில் மூங்கில்துறைப்பட்டு, கச்சராப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் எல்லைக்குட்பட்ட விவசாயி கள் தங்களுடைய கரும்புகள் காய்ந்து அத னுடைய பிழிதிறன் என்பதே சுத்தமாக இல்லாத நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே பட்டுப்போன கரும்பு ஐந்து மாதத்திற்கு உட்பட்டு இருந்தால் அவற்றை பட்டுப்போன கரும்பு என சான்று கொடுக்க வேண்டும். அதேபோல 9 மாத கரும்பு என்றால் அதனை வெட்டுவதற் கும், டைவர்ஷனுக்குமான உத்தரவு வழங்க வழங்கவேண்டும். ஆயிரம் ஏக்கருக்கு மேல் சொந்தக் கரும்பில் மாடு விட்டு மேய்க்கப் பட்ட நிலையில் மேலும் விவசாயிகள் நஷ்டம் அடைவதைத் தவிர்க்க உடனடியாக 30.6.2019க்குள் பிற ஆலைகளுக்கு டைவர்ஷன் வழங்க வேண்டும் எனக்கோரி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1800க்கும் மேற்பட்ட விவசாயிகளும், இந்த ஆலை எல்லைக்குட்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 400க்கும் மேற்பட்ட விவ சாயிகளும்  மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இயக்குனரிடமும் கச்சராபாளையம் ஆலையில் இரண்டா யிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும் அதன் இயக்குனரிடம் மனு அளித்துள்ளனர்.

விவசாயிகளை காப்பாற்று...

இதுபோன்ற நிலைதான் மாவட்டம் முழுவதும் நிலவுகிறது. நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து விவசாயிகள் வேதனையின் விளிம்பில் வாடி வருகின்றனர். இந்நிலை யில் உடனடியாக விழுப்புரம் மாவட்டத்தில் காயும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து உடனடியாக பயி ருக்கான இன்சூரன்ஸ் தொகை மற்றும் பிற விவசாயிகளுக்கும் காய்ந்த கரும்பு உள்ளிட்ட பிற பயிர்களுக்கான உரிய நஷ்ட  ஈடு வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் சர்க்கரைத் துறை இயக்குனரிடம் நேரில் மனு அளித்து கேட்டுக் கொண்டுள்ளனர்.

நிலமெனும் நல்லாள்...

தன் மூத்த பிள்ளைகளான விவசாயி களுக்கு நீர் தந்து அவர்களை நல்வாழ்வு வாழ வைக்க முடியவில்லையே என “மடி யற்ற தாயைப்போல” கலங்கும் நில மென்னும் நல்லாளின் நீராதாரத்தை மணல் கொள்ளை மூலமும், பகாசுர தனியார் தொழிற்சாலைகள் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீரை உறிஞ்சுவதன் மூலமும் கொழுத்துக்  கொண்டிருக்கும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும்தான் நம் உடல்வற்ற முழு காரணம்’ என்பதை நமது வேளாண்குடிமக்கள் புரிந்து கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை.