tamilnadu

img

டெல்டாவில் தூர்வாரும் பணி 72 சதவீதம் நிறைவு

சிறப்புக் கண்காணிப்பு அலுவலர் தகவல்

தஞ்சாவூர், ஜூன் 11-  டெல்டாவில் தூர்வாரும் பணி, இதுவரை 72 சதவீதம் நிறைவடைந்துள்ளது என நீர் வளப் பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்புக் கழகத் தலைவரும், தூர்வாரும் பணிக்கான சிறப்புக் கண்காணிப்பு அலுவலருமான சத்யகோபால் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் அடுத்த களிமேடு கிராமத்திலுள்ள முதலைமுத்து வாரி வடிகாலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியினை ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; 

“டெல்டா மாவட்டங்களில் 67 கோடி ரூபாய் மதிப்பில் 3,455 கி.மீ., தொலைவுக்கு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 360 பணிகளுக்கு 64 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களில், 2,289 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது. திருச்சி, அரியலூர், கரூர் மாவட்டங்களையும் சேர்த்து மொத்தத்தில் 2,450 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரும் பணி நிறைவடைந்துள்ளது.  அதாவது 72 சதவீதப் பணி முடிவடைந்தது. குறிப்பாக, தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் திட்டத்தின் கீழ் 165 பணிகள் மேற்கொள்ள 23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட 945 கி.மீ., தொலைவில் இதுவரை 720 கி.மீ. தொலைவுக்கு பணி முடிக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1,200 பணிகளுக்கு சுமார் 499 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 109 பணிகள் 35 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் 3 நாள்களில் முடிக்கப்படும். இதன் மூலம், கடைமடைப் பகுதி வரை தண்ணீர் நிச்சயமாக சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.