தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுக மாகி தெலுங்கு, மலையாளம், கன்ன டம், ஹிந்தி, ஆங்கிலம், பாகிஸ்தான் என பன்மொழி திரைப்படங்களில் ஸ்டண்ட் ‘மாஸ்டர்’, ஸ்டண்ட் ‘இயக்குநர்’ என திரை ஓவியம் தீட்டிய 90 வயதாகும் “கலைச் செல்வம், ருத்ரநாகம், ஜூடோ” கே.கே. ரத்தினத்துக்கு விரைவில் தமிழக அரசின் சார்பில் ‘கலை மாமணி’ விருது வழங்கப்படவுள்ளது. வெற்றிகரமாக ஓடிய திரைப்படங்களில் அவ ரது பங்களிப்புக்கும் திறமைக்கும் திரைத்துறை யினர் அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புக்களும் அளித்த விருதுகளும் பரிசு களும் பதக்கங்களும், கேடயங்களும் அவரது அலமாரிகளில் அலங்கரித்துக்கொண்டி ருக்கின்றன.. குடியாத்தம் நகரம் தர்ம பேட்டை, பெரியப்ப முதலித் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு மாலைப் பொழுதில் சென்றதும் நமது குரலை கேட்ட அடுத்த வினாடியே தோழரே வாருங்கள்.. வாருங்கள்... என ஓடோடி வந்து இன்முகத்தோடு கட்டி அணைத்துக் கொண்டார். திரைத் துறையில் கால்பதித்து ஓய்வுபெறும் வரையிலும் இடம்பெற்ற அவரது சாகசங்கள் புகைப்பட காட்சிகளாக நுழைவு வாயிலில் துவங்கி வீடு முழுக்க சுவர்களை அலங்கரிக்கின்றன.
அவர் ஒரு சகாப்தம்
திரைத்துறையில் கடுமையாக உழைத்தவர். சண்டைக் காட்சிகளில் புதுமைகளைப் புகுத்தியவர். ஏராளமான கலைஞர்களை உருவாக்கியவர். இந்திய திரை உலகின் ‘சூப்பர் ஸ்டார்’ நடிகர்களுக்கு அன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் சண்டைக் காட்சிகளை அமைத்துக் கொடுத்ததில் அவருக்கு நிகர் அவரே. ஐந்து ரூபாய், பத்து ரூபாய், பதினைந்து ரூபாய் கூலிக்கு ஸ்டண்ட் கலைஞர்களாக நடித்தவர்களுக்கு யூனியன் கிடையாது. மேக்கப்மேன், லைட்மேன்களுக்கும் சங்கம் இல்லை. கேமராமேன், சிகை அலங்கார கலைஞர்கள் என யாருக்கும் சங்கம் என்பதே தெரியாது. அந்த காலத்தில் நடிகர்களுக்கு மட்டும் சங்கம் உண்டு! மிருகங்களை வைத்து படம் எடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்த விட்டலாச்சாரியாவை, ஒரு படப்பிடிப்பின் சண்டைக் காட்சியின்போது புலி தாக்கியது. அதில் இதயம் சுக்கு நூறாகி பிரியாவிடை பெற்றார். அவரது குடும்பத்தை பாதுகாக்க அரசும், தயாரிப்பாளர்களும் முன்வரவில்லை. விட்டலாச்சாரியாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ஸ்டண்ட் கலைஞர்கள் அனைவரும் அதே இடத்தில் ஒன்று கூடினர். சங்கத்தை துவக்கினார். நாளொன்றுக்கு 250 ரூபாய் கூலி வேண்டும் என்று முதன் முதன் கோரிக்கை வைத்தனர். தயாரிப்பாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. போராட்டத்தை துவக்கினர். ஸ்டண்ட் கலைஞர்களின் ஒற்றுமையால் படப்பிடிப்புகள் ரத்தாயின. வேறுவழியின்றி சங்க கோரிக்கையை தயாரிப்பாளர்கள் ஏற்றனர். அந்த வெற்றியை தொடர்ந்து, தமிழ் திரை உலகில் 24 சங்கங்களை துவக்கி அதற்கும் தலைமை தாங்கினார் ஜூடோ ரத்தினம். 1972ஆம் ஆண்டு அவரச நிலையை கொண்டு வந்த இந்திரா காந்தி, திரைப்படங்களில் வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெறுகிறது என்று சண்டை காட்சிகளுக்கு தடை விதித்தார். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியதால் தில்லி வரைக்கும் சென்று போராடி வெற்றி பெற்றதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. அனுபவத்தையும், திரைப்பட தொழிலாளர் சம்மேளனமாக உருவானதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல், கவிஞர் கண்ணதாசன் சகோதரர் நடத்தி வந்த சாரதா ஸ்டூடியோவில் நடந்த திரைப்பட தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க தயாரிப்பாளர்களுடன் இணைந்த எம்ஜிஆர், போட்டி சங்கத்தினரை கொண்டு நடத்திய தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தார் ரத்தினம்.
‘தாமரைக் குளமும் கொஞ்சும் குமரியும்’
“புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான முத்தா வீ. சீனிவாசன் இயக்கத்தில் முகவை ராஜமாணிக்கம் கதை வசனத்தில் 1959 ஆம் ஆண்டில் உருவான ‘தாமரைக் குளம்’ படத்தில் முதன்முதலாக திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகி, மாடர்ன் தியேட்டர் உரிமையாளரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான டி.ஆர். சுந்தரம் இயக்கிய ‘கொஞ்சும் குமரி’ திரைப்படத்தில் 1963 ஆம் ஆண்டில் ‘ஸ்டாண்ட்’ கே.கே. ரத்னம் என்ற டைட்டிலோடு அறிமுகமான முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படம் வெளியிடுவதற்கு முன்பு சுந்தரம் மறைந்தார். அவரது மகன் ராம சுந்தரம் பொறுப்புகளை ஏற்றார். தந்தை வழியில் ‘வல்லவன் ஒருவன்’ படத்திற்கு இயக்குனர் தயாரிப்பாளரானார். கே.கே. ரத்தினம்தான் ஸ்டாண்ட் மாஸ்டர். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் திரைப்படங்களில் கராத்தே, ஜூடோ சண்டை காட்சிகளை முதன்முதலாக அறிமுகம் செய்வர் ரத்தனம். இந்த புதிய முயற்சிக்கு தயாரிப்பாளர்கள், நடிகர்கள், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
புல்லும் ஆயுதம்!
‘இரு வல்லவர்கள்’ படத்தில் விதவிதமாக செய்து காட்டிய சண்டைக் காட்சிகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பும் அதிகமாக வசூலும் கிடைத்தது. ஏவிஎம் ஸ்டுடியோவில் வாய்ப்பு கேட்டு கடிதம் எழுதியதும் இயக்குநர் கிருஷ்ணன்-பஞ்சு, உதவி இயக்குநர் முத்துராமன் மூலமாகவும் பிற சினிமா கம்பெனிகள் தொடர்பாலும் வரிசையாக கிடைத்த வாய்ப்புகள் இவரை திரைத்துறையில் நிலைத்து நிற்க செய்தது. ‘வல்லவன் ஒருவன்’ திரைப்பட வெற்றியை கொண்டாட கரீம் பாய் தலைமையில் நடந்த சினிமா பத்திரிகை ஆசிரியர்கள் சங்க நிகழ்ச்சி இவரது திறமைகள் முழுமையாக வெளிப்பட வாய்ப்பாக இருந்தது. அதை பார்த்து ரசித்த மறைந்த நடிகர்கள் ஜெய்சங்கர், அசோகன், விஜயபுரி ஆனந்தன் என பலரும் பாராட்டி கொடுத்த பட்டம்தான் இவரது பெயருக்கு முன் இடம்பெற்றுள்ள ‘ஜூடோ’. திரைப்பட பத்திரிகையாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் நடத்திய மாநாட்டில் பாம்பு மாதிரி நடனமாடி காட்டியதும் நெருப்புக்குள் புகுந்து வெளியே வரும் சாகசத்தை செய்து காட்டியதால் ‘ருத்ர நாகம்’ பட்டம் கொடுத்தனர். இந்தி திரை உலகில் பிரம்மாண்டத்தை ஏற்படுத்திய ‘கங்கு வா’, ‘ஜான் ஜானி ஜனார்த்தனன்’ (தமிழில் மூன்று முகம்) ஆகிய திரைப்படங்களுக்கு பிலிம் ஃபேர் விருது வழங்கப்பட்டது.
சகலகலா மன்னன்!
தமிழ் திரை உலகில் சிவாஜி, எம்ஜிஆர், ஜெய்சங்கர், அசோகன், ரஜினி, கமல் என முன்னணி நடிகர் மட்டுமன்றி ஏராளமான நடிகர்கள் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர், ஸ்டண்ட் இயக்குநராக விதவிதமான சாகசங்கள், சண்டைக் காட்சிகளை அறிமுகம் செய்தார். இதைப் பார்த்து ரசித்த இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு ஜூடோ ரத்தினத்தை தேடி வந்தனர்.கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் ராஜ்குமாருக்கு 52 படங்களில் சண்டைக் காட்சிகள் அமைத்து கொடுத்து ‘ஜேம்ஸ் பாண்ட்’ ‘சிஐடி’ யாக மாற்றி னார். கேரளாவில் பிரேம் நசீர், மது, மம்முட்டி, மோகன்லால் போன்றோ ருக்கு புது புது விதமான சண்டைக் காட்சி அமைத்துக் கொடுத்தார். தெலுங்கில் அக்கினேனி நாகேஸ்வரராவ், என்.டி.ஆர், அவரது மகன் பாலகிருஷ்ணா, சோபன்பாபு, கிருஷ்ணா, சிரஞ்சீவி , வெங்கடேஷ்பாபு என பலரது படங்களிலும் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளால் தென்னிந்திய திரைப்படங்களிலும் இவர் முன்னணி ஸ்ட்ண்ட் மாஸ்டராக வலம் வந்தார்.
வட இந்தியாவில் மும்பை திரை உலகில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி, அனில்கபூர், கோவிந்தா உள்ளிட்ட 7 சூப்பர் ஸ்டார்களின் திரைப்படங்களுக்கு ஜூடோ கே.கே.ரத்தினம் தான் ஸ்டண்ட் இயக்குநர். தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்தியில் 6 படமும், உலக நாயகன் கமலஹாசனுக்கு இரண்டு படத்திலும் சண்டைக் காட்சிகளை அமைத்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார். இந்திய திரை உலகம் மட்டுமல்ல உலக அளவில் ஆங்கில படக் குழுவினரை தமிழ்நாட்டிற்கு வர வைத்து ஏலகிரி மலையில் பாகிஸ்தான், வங்கதேச நாடுகளிலிருந்து தமிழகம் வந்த படக்குழுவினருக்கு ஒகேனக்கலில் சில இடங்களில் இவர் அமைத்துக் கொடுத்த 7 சண்டைக் காட்சிகளும் ‘சூப்பர் ஹிட்’டானது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் ‘திருப்பம்’படத்திற்கான டூப் போடும் போது நிகழ்ந்த விபத்தில் கால் முறிந்தது. அத்துடன் திரை வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டு ஓய்வு பெற்றுள்ளார்.
சிறை வாணி
இவருக்கு மூன்று மகன்கள், 5 மகள்கள். ஒரு மகன் ஜூடோ ராமு திரைப்படத்துறையில் தந்தையைப் போன்று ஸ்டண்ட் இயக்குநர். மற்றொரு மகன் பகத்சிங் ஒளிப்பதிவாளர். மூன்றாவது மகன் கோபிநாத் இந்தி திரை உலகில் கொடி கட்டிப் பறக்கிறார். திரையுலகில் ஜாம்பவனாக வலம் வந்த ஜூடோ கே.கே.ரத்தினம் திரைப்பட தொழிலாளர்களுக்காக போராட்டம் நடத்தி சிறைவாசம் அனுபவித்தவர். விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க நடந்த போராட்டத்தில் மனைவியுடன் கலந்து கொண்டபோது கைது செய்யப்பட்ட 42 தோழர்களில் இவரும் ஒருவர். சிறையில் இருந்து விடுதலையாகி வீடு திரும்பியபோது பிறந்த மகளுக்கு “சிறை வாணி” என்று பெயர் வைத்தார். அவர் தற்போது ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அடித்தளம்...
தொடக்கத்தில் ஆலைத் தொழிலாளியான தோழர் கே.கே.ரத்தனம் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான சிலம்பம், கராத்தே, குத்துச்சண்டைகளில் முறையாக வெற்றி பெற்றதுடன் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் மாநில, அகில இந்திய மாநாடுகளின், ஊர்வலம் பொதுக்கூட்ட மேடைகளில் இவரது சாகசங்கள் இடம்பெறாத நிகழ்வே கிடையாத காலம் உண்டு. அதைப்பார்த்த கட்சியின் முன்னோடிகளும், மூத்த தலைவர்களும் வழிகாட்ட திரைத் துறையிலும் கம்யூனிஸ்டாக கால்பதித்து ஸ்டாண்ட் இயக்குநராக உச்சத்தை தொட்டார். அவரது கலை சேவையை பாராட்டி இம்மாதம் 13ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் ஜூடோ கே.கே. ரத்தினத்துக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கவரவிக்கிறது தமிழக அரசு.