சென்னை,மார்ச் 18- கொரோனா தாக்கம் எதிரொலியாக டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018-19, 2019-20ல் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு மார்ச் 20 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரையும், சுருக்கெழுத்தர் பதவிக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரையும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்துள்ளதாலும், கொரோனாவைத் தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாலும் குரூப்- 4 சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது. இதற்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.