சென்னை,பிப்.27- இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மோதல் போக்கை உருவாக்க பாஜகவினர் முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். சென்னையில் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் புதனன்று (பிப்.26) நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் அவர் பேசியதாவது: வரலாற்றில் என்றுமே இல்லாத அளவிற்கு இஸ்லாமியப் பெண்கள் வீரப் போராளிகளாக களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ இது இஸ்லாமியர்களுக்கான போராட்டம் என்று கூறி இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மோதல் போக்கை உருவாக்க முயற்சிக்கிறார்கள். என்.பி.ஆர். என்.ஆர்.சி. வந்தால் இஸ்லாமியர்கள் மட்டும் பாதிக்கப்படமாட்டார்கள், நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தைச் சேர்ந்த அடித்தட்டு மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்ற உண்மையை இந்த சமூகத்தில் உள்ள அனைவரிடத்திலும் புரிய வைக்க வேண்டிய கடமை உள்ளது.
வண்ணாரப்பேட்டை
ஷாகின்பாக்கிலே, வண்ணாரப்பேட்டையிலே இஸ்லாமியப் பெண்கள் போராடுகிறார்கள் என்றால் அவர்களுக்காக மட்டும் போராடவில்லை. ஒட்டுமொத்த இந்தியர்களுக்காகவும் போராடுகிறார்கள். ஒரு கொடூரமான சிஏஏ சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் இந்திய மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல், எப்படி எதிர்கொள்வது என்று திணறிக் கொண்டிருக்கும் போது, ஒருபோதும் இந்த சட்டத்தை ஏற்க மாட்டோம் எனக் கேரள அரசு சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி இந்தியாவுக்கே வழிகாட்டியது. அம்மாநிலத்தில் கம்யூனிஸ்ட்டுகளும் காங்கிரஸ் கட்சியினரும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்கிற பாகுபாட்டை உடைத்தெறிந்து ஒரே மேடையில் நின்று இதை எதிர்த்தார்கள்.
உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வி
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 2 கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்துகளைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது. அது வெறும் பேனாவினால் போட்ட கையெழுத்தில்லை, அது ரத்தத்தால் போடப்பட்ட கையெழுத்து. அது வெறும் கையெழுத்தில்லை, மோடி அரசின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போகிற கையெழுத்து. தில்லியிலே கலவரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமித்ஷா கட்டுப்பாட்டிலே இருக்கின்ற காவல் துறை கடமையோடு செயல்படுகிறதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் காவல் துறை தன்னுடைய கடமையை நிறைவேற்றி இருந்தால் இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நடைபெற்றிருக்காது என்று. இந்த போராட்டம் துவங்கியதிலிருந்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தவிடுபொடியாகும்
தில்லியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தேவையில்லா மல் சிஏஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றை கொண்டு வந்து நாட்டை பிணக்காடாக மாற்றுவதுதான் உங்கள் லட்சியம் என்றால், எங்கள் அனைவரின் மூச்சும் ஒன்றாக எழுமானால் உங்கள் ஆட்சி தவிடுபொடியாகி விடும் என எச்சரித்தார்.
வேடிக்கை பார்க்கும் எடப்பாடி அரசு
ஆயுதங்கள் வருவதற்கு முன்பு நீங்களாக அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். ஆயுதங்கள் உங்களுக்கு மட்டும்தான் சொந்தமா? நாட்டில் யார் வன்முறையை உருவாக்குகிறார்கள். ஆயுதங்கள் வருவதற்குள் கலைந்து செல்லுங்கள் என எச். ராஜா அறிக்கை விடுகிறார். எடப்பாடி அரசு வேடிக்கை பார்க்கிறது. எச்.ராஜா போன்ற பேட்டை ரவுடிகள் தமிழகத்தை ரணகளமாக்கப் பார்க்கிறார்கள். நெல்லைக் கண்ணனைத் தீவிரவாதி போல் நள்ளிரவு 12 மணிக்குக் கைது செய்து சிறையில் அடைக்கிறீர்கள். ஆயுதம் வரும் என்று கூறிய எச்.ராஜாவைக் கைது செய்யவில்லை.
பிரஜாபதி அடிகளாருக்கு மிரட்டல்
பிரஜாபதி அடிகளார் என்ன இந்துமத விரோதியா அல்லது அந்நிய நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இங்கு குடியேறியவரா அல்லது அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவரா? இல்லையே. ஆனால் அவருக்கு நீங்கள் குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசக் கூடாது என்று மிரட்டல் விடப்படுகிறது. பிரஜாபதி அடிகளார் மட்டுமல்ல மதச்சார்பற்ற கொள்கையிலே நம்பிக்கை இருக்கிற யாருக்கேனும் ஒரு சிறு பாதிப்பு ஏற்பட்டால் கூட மக்கள் சக்தி வேடிக்கை பார்க்காது, உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும். மதத்தை அடிப்படையாக வைத்து நாட்டை கூறு போடுகிற சகுனி கூட்டத்திற்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.
போராட்ட களம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி யிலே இடம் பெற்றிருக்கிற நிதிஷ்குமார் என்ஆர்சி தேவையில்லை என்.பி.ஆரை செயல்படுத்த மாட்டோம் என அறிவித்து விட்டார். நிதிஷ்குமாருக்கு இருக்கின்ற தைரியம் கூட இல்லாத நீங்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். வாரிசு என்று கூறுவதற்கு வெட்கமாக இல்லையா? தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றினால் போராட்டங்கள் முடிவுக்கு வரும். ஆனால் மோடிக்குப் பயந்து நடுங்கி தீர்மானம் நிறைவேற்ற மாட்டோம் என்றால் தமிழகம் போராட்டக் களமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.