திருநெல்வேலி, செப் 4- மதுரையில் தோழர் திருச்சிற்றம்பலம் (79) காலமானார். அவரின் மறைவுக்குப் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர் தோழர் பி.திருச்சிற்றம்பலம். இவர் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், சிபிஎம் நெல்லை மாநகர முன்னாள் கவுன்சிலர் பி.தியாகராஜன் ஆகியோரின் மூத்த சகோதரர் ஆவார். இவர் வீரவநல்லூரில் இருக்கும் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு மதுரையில் உள்ள தனது மகனின் வீட்டுக்கு சென்று சிகிச்சைக்காக மதுரை வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை மாலை 3 மணிக்கு காலமானார். மறைந்த தோழர் திருசிற்றம்பலத்திற்கு பார்வதி என்ற மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர் .
மறைந்த தோழர் திருச்சிற்றம்பலம் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தவர். பின்னர் மார்க்சிஸ்ட் கட்சி உதயமான போது அதில் இணைந்தார். வீரவநல்லூரில் உள்ள கோமதி மில்லில் துவக்கத்தில் பணிபுரிந்த இவர் சி.ஐ.டி.யு துவங்கப்படுவதற்கு முன்னர் கோமதி மில் தொழிலாளர் சங்கம் துவக்கி அதில் பொதுச்செயலாளராக திறம்பட பணியாற்றினார். அந்த சங்கம், மறைந்த தோழர் ஏ.நல்லசிவனால் துவக்கி வைக்கப்பட்டதாகும். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்துபணியாற்றியவர், எமெர்ஜென்சி நேரத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இவரது இறுதி நிகழ்ச்சி வீரவநல்லூரில் வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். தோழர் திருச்சிற்றம்பலம் மறைவுச் செய்தி அறிந்து மருத்துவமனைக்கு சென்று கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், மதுக்கூர் இராமலிங்கம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.