tamilnadu

img

பாலய்யாவின் முடி

அப்பச்சி சலூன் கடை இடையில் ஏற்பட்ட நவீனமயத் தாக்கம் ஏதுமின்றி ஐம்பது ஆண்டுகாலமாக அப்படியே இருந்தது. இடுப்பில் குடத்துடன் முண்டு கட்டிய கேரளப் பெண் சாயம் போன போட்டாவாய் சுவற்றில் தொங்கினாள். முடியை வெட்டி முடித்து விட்டதாக பாலய்யாவை எழுப்பும் பாவனையில் பிச்சுமணி சொன்னார். பாலய்யாவுக்கு நிம்மதியான ஒரு தூக்கம் இழந்த தவிப்பு. அரைக் கண்களைத் திறந்தவாறே, “இன்னும் கொஞ்சம் வெட்டப்பா” என்றார்.  “ஏனுங்க வெட்றதுக்கு என்னங்க இருக்கு, நல்லா முழிச்சுப்பாருங்க” என்று சடைந்த பிச்சு மணியை முறைத்துப் பார்த்துவிட்டு, கண்ணாடி யில் வலுக்கையாக இருந்த தலையைப் பார்த்து பொசுக்கென்று கோபப்பட்டார்.

“தலைல இருந்த முடியெல்லாம் எங்கய்யா?” என்றார். அதற்கு பிச்சுமணி “ஏனுங்க அது போய் இருபது வருசமாச்சுங்க, இப்ப கேக்கறீங்க” என்  றார். பாலய்யா, “இருபத்தஞ்சு வருசமா நீ தான் அய்யா முடி வெட்டுற, முடி எங்க போச்சுன்னு நீ  தான சொல்லனும்” என்றார். “நானென்னமோ, ஒங்க  மண்டை முடிய புடுங்கி பொங்க வச்சுத் தின்ன மாதிரி சொல்றீங்க,” என பொக்கை வாய் பிளந்து  சிரித்த பிச்சுமணி பாவமாக இருந்தார். இப்பொழுது பாலய்யா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார். “இருபது வருசமா முடியில்ல அப்புறம் எதுக்குய்யா முடி வெட்ற, வெட்றதுக்கு காசு வேற கேக்குற”, என வில்லங்கமாக கேட்டார். “ஏனுங்க முடிவெட்ட நானா கூப்டனுங்க,” என்று கூறிய பிச்சுமணி, பொக்கை வாய் உதடுகளை கூம்பு போல குவித்துக் காட்டி கேலி செய்தார். பாலய்யா தோளில் போட்டிருந்த துண்டால் கழுத்திலும், முதுகிலும் ஒட்டி இருந்த முடித்துகள்களை தட்டி விட்டார். பிறகு, “ சரிப்பா பிச்சுமணி நாந்தான் தூங்கிட்டேன், வெட்டுன முடிய கொஞ்சம் காட்டுய்யா பெறகு காசு தர்றேன்” என நியாயஸ்தனைப் போலக் கேட்டார்.

பிச்சுமணி கையில் இருந்த கத்திரிக்கோலை கண்ணாடி டேபிளில் வைத்துவிட்டு, பாலய்யாவைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார். “அப்படி வாய்யா வழிக்கி இந்தா இத வாங்கிக்க” என பதினைந்து ஒரு ரூபாய் காசுகளை எண்ணி பாலய்யா பிச்சுமணியிடம் கொடுத்தார். பாலய்யா, ஹேங்கரில் மாட்டியிருந்த சட்டையை எடுத்து அணிந்து கொண்டவர், “பிச்சுமணி நாம பேசுன இந்த மயிறு சமாச்சாரத்துல ஒலக விவ காரம் அடங்கி இருக்கு ஒனக்குத் தெரியுமா?” எனக் கேட்டார். பிச்சுமணி ஒன்றும் பேசாமல், கடை வாசலுக்கு வெளியே வீதியை வளைத்துப் போட்டு படுத்திருந்த தெரு நாயை பார்த்திருந்தார்.

அதை கவனித்த பாலய்யா அசராமல், “பிச்சுமணி இருபது வரு சத்துக்கு முன்னாடி எந்தலையில ஓரளவுக்காவது முடி இருந்துச்சு அப்ப டித்தான் இந்த நாட்டுல உள்ள ஜனங்க கிட்ட கொஞ்சம் காசு பணம் இருந்துச்சு சொத்து சுகம் இருந்துச்சு அப்புறம் வந்துச்சு பாரு ஒலகப் பொரு ளாதாரம், இருந்த தலைமுடி உதிந்த மாதிரி அது ஜனங்ககிட்ட இருந்த காசை யும் சொத்து சொகத்தையும் அழிச்சு எடுத்துட்டுப் போயிருச்சு” என்றார். இது என்னடா வம்பாப் போச்சு என அதிர்ச்சியடைந்த பிச்சுமணி “அது சரி அடுத்தவாட்டி முடி வெட்ட வருவீங்களா மாட்டீங்களா” என கறாராக கேட்டார். அதற்கு பலமாக சிரித்த பாலய்யா, “இன்னக்கி வரை முடி இருந்தாலும்  இல்லைன்னாலும் ஒங்கிட்ட முடிவெட்ட வராம இருக்கனா இல்ல நீ தான் வெட்டாம இருக்கியா நாடு போற போக்கச் சொன்னேன். இருக்குதோ இல்லையோ பொழப்ப ஓட்டித்தான ஆகனும்” எனக் கூறியவாறே கடையை  விட்டு வெளியேறினார்.