tamilnadu

img

ஒரு இந்து தேசமாக இந்தியா மரித்துப் போவதா?

இயற்கையை மீறிய ஒளிவட்டம் நரேந்திர மோடியைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கின்ற இந்த சூழலில், மூளைச் சலவை செய்யப்பட்ட மக்கள் தங்களைக் காக்க வந்த ரட்சகராக மோடியை நம்புவது என்பது இயற்கையானதே. அது அரசியல் உலகிலிருந்து மோடி மற்றும் வாக்காளர்களை மதம் சார்ந்த உலகிற்கு மாற்றுகின்றது. இதனை ஒப்பிட்டுப் பார்த்தால், முன்பிருந்த ‘வகுப்புவாத அரசியல்’ என்பது தோல் மீது தோன்றுகின்ற சிறு பொறிகளாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய அரசியலோ ஆளைக் கொல்லுகின்ற புற்றுநோய் போன்று இருக்கின்றது.

மோடி மற்றும் அமித்ஷாவால் உருவாக்கப்பட்டிருக்கும் வகுப்புவாத அணிதிரட்டல் அரசியலால் ஏற்பட்டிருக்கும்தேசியப் பேரழிவை இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.இந்திய அடிவானத்தில் மிகப் பெரிய அளவில் பேராபத்து சூழ்ந்து கொண்டு வருவதை என்னால் காணமுடிகிறது. இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மை, ஜனநாயகம் ஆகியவை மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி இருப்பதை நான் காண்கிறேன். நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நமதுஜனநாயகக் குடியரசின் அடிப்படை விழுமியங்கள் மூச்சுத்திணறி வருகின்றன. இந்த விழுமியங்கள் மேம்படுவதற்கான ஜனநாயக வெளிகளில் வகுப்புவாதம், அணிதிரட்டல், வெறுப்பு என்ற நஞ்சு கலக்கப்பட்டிருக்கிறது. மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் வீழ்வின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கும் மோடி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பதவியில் அமர முடியும் என்றால், இந்து தேசத்தில் ‘இருமுறை பிறந்தவர்களாகி’ விடுவோம்.  

தவறான நோக்கங்கள் கொண்ட மிகத் தீவிரமான,ஆபத்தான கருத்தியல் மாற்றங்கள் செயல்படுத்தப்படுவதை நான் இப்போது பார்க்கிறேன். அரசியல் தத்துவவாதிகளால் இன்னும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத இந்த கருத்தியல் மாற்றங்களை ‘இனவாத அரசியலில்’ இருந்து ‘மாய அரசியலுக்கு’ மாறுவதாக நாம்கூறலாம். மோடி மற்றும் அமித்ஷாவால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அரசியல், பலராலும் வகுப்புவாத அணிதிரட்டல் அரசியல் என்பதாக அரைகுறையாகவே விவரிக்கப்படுகிறது. இது உண்மையில் மதச்சார்பின்மைக்கு எதிரான மிக மோசமான அரசியலாகும். 2014ஆம் ஆண்டுவரை நிலவி வந்த அரசியல், மக்களின் மத உணர்வுகளைஅரசியல் ஆதாயங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்படுகின்ற வகையிலே இருந்து வந்தது. ஆனால் இப்போதுவளர்ந்து வரும் இந்த அரசியல், மதத்திலிருந்து நேரடியாகத் தன்னை வடிவெடுத்துக் கொள்கின்ற அரசியலாக இருக்கின்றது.மோடி எவ்வாறு முன்னிறுத்தப்படுகிறார் என்பதைநன்றாக கவனியுங்கள். எந்தவொரு அரசியல் தலைவரும் நமது வரலாற்றில் இதைப் போன்று முன்னிறுத்தப்பட்டதில்லை. வாரணாசியில் பத்திரிகையாளர் ஒருவரால் நேர்காணல் செய்யப்பட்ட பெண் மூலமாக அந்த அரசியல்செல்கின்ற திசையை நம்மால் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது. மோடியை அவதாரங்களின் வரிசையில் வைத்துஅந்தப் பெண் பேசினார். இதற்காக நாம் அவரைக் குற்றம்சொல்ல முடியாது.

இயற்கையை மீறிய ஒளிவட்டம் நரேந்திர மோடியைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கின்ற இந்த சூழலில், மூளைச் சலவைசெய்யப்பட்ட மக்கள் தங்களைக் காக்க வந்த ரட்சகராக மோடியை நம்புவது என்பது இயற்கையானதே. அது அரசியல் உலகிலிருந்து மோடி மற்றும் வாக்காளர்களை மதம் சார்ந்த உலகிற்கு மாற்றுகின்றது. இதனை ஒப்பிட்டுப்பார்த்தால், முன்பிருந்த ‘வகுப்புவாத அரசியல்’ என்பது தோல் மீது தோன்றுகின்ற சிறு பொறிகளாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய அரசியலோ ஆளைக் கொல்லுகின்ற புற்றுநோய் போன்று இருக்கின்றது.‘சந்தேகம், விவாதங்கள் மற்றும் மாற்றுக் கருத்துகளுக்கு’ ஒரு பரந்த வெளியை ஏற்படுத்தித் தருவதாக ஜனநாயக அரசியல் உள்ளது. அரசியல் தலைவர் ஒருவர் சொல்கின்ற கருத்துகளுடன் விவாதம் செய்வது, மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பது போன்றவை மன்னிக்க முடியாத குற்றங்களாக அங்கே கருதப்படுவதில்லை. மதத்தில் - குறிப்பாக வீடுபேறு தருகின்ற அல்லது ரட்சிப்பின்மையமாகத் திகழ்கின்ற மதத்தில் – ரட்சகர் மீது அவநம்பிக்கை கொள்வதென்பது மதங்களுக்கு எதிரான நம்பிக்கையாகக் கருதப்படுகிறது. மதங்களுக்கு எதிரானநம்பிக்கை கொண்டவர்களுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்று இருப்பது அங்கிருப்பவர்களின் கடமையாகிப் போகிறது. மதநம்பிக்கை கொண்டு விசுவாசமாக இருக்கின்ற அந்த சமுதாயத்தில் மத எதிர்ப்பாளர்களுக்கு இடம் இருப்பதில்லை. அது ஒரு இறைமை ஆட்சியாகஇருந்து விட்டால், மத எதிர்ப்பாளர்களுக்கு நாட்டிற்குள்ளும்இடம் கிடைக்கப்போவதில்லை.

மோடியின் நிலைப்பாட்டிற்கு எதிராக இருப்பவர்களிடம் சகிப்பற்ற தன்மை அதிகரித்துக் கொண்டே வருவது 2014ஆம் ஆண்டிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. இப்போது முன்வைக்கப்படும் மாற்றுக் கருத்துக்கள் மதங்களுக்கு எதிரானவையாகவே கருதப்படுகின்றன. நிச்சயம் இது அரசியலல்ல; அரசியல் போன்ற தோற்றத்தை மட்டுமே கொண்டிருக்கின்றது. மதத்திற்கு எதிரானவர்கள் நரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று மதங்களில் கூறியுள்ளவாறு இன்றைக்கு இந்த மோடி நிலத்தில்இருக்கின்ற அரசியல் எதிர்ப்பாளர்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டிய இடமாக பாகிஸ்தான் இருக்கிறது.பகுத்தறிவு கொண்ட விமர்சன சிந்தனை, அறிவியல்மனப்பான்மை ஆகியவற்றை பரப்புவதற்கும் ஒருங்கிணைப்பதற்குமான கடமை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டுமென்று இந்திய அரசியலமைப்பு நமக்கு கட்டளையிடுகிறது. ஆனால், மதம் எதிர்பார்க்கின்ற -  தேவைக்கும் அதிகமாக அன்றாடம் நமக்கு அளிக்கப்படுகிற விஷயங்கள் மீது நமக்கு கண்மூடித்தனமான நம்பிக்கை இன்றைய தினம் தேவைப்படுகிறது. மதத்தின் மீது பாய்ச்சப்படுகின்ற வெளிச்சத்தின் மையம் ஆன்மாவாக இருக்கிற நிலையில், தங்கள் வழிக்கு மக்களை மயக்கி வழிநடத்திச் செல்லும் மதகுருக்களால் நிறைந்துள்ள பிரபல மதவாதத்திற்கு அத்தகைய கண்மூடித்தனமான நம்பிக்கை மட்டுமே தேவைப்படும்.

ஒவ்வொரு ஆன்மீக மரபும் - குறிப்பாக இந்தியாவில் தோன்றிய மதங்கள் பொறுப்பான இறை மறுப்புக் கோட்பாடுகளை அனுமதிக்கின்றன. கண்மூடித்தனமான நம்பிக்கை அதனை நம்புகிறவர்களுக்கு தீங்கையே விளைவிக்கும். அது அவனை அடிமையாக்கி, மனநலம் குன்றியவனாக்கி விடுகிறது. ஆன்மீகம் என்பது உண்மையைத் தேடுவதாக இருப்பதாக புத்தரும், மகரிஷி தயானந்தரும் வலியுறுத்தி கூறுகின்றனர். சிந்தனையற்ற நம்பிக்கை என்பதை மதிக்கின்ற அங்கீகரிக்கப்பட்ட தத்துவமோ அல்லது வேறெந்த வழியோ இருக்கவில்லை. ராணுவத்தின் மீது கூட கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்க வேண்டும் என்றே மோடி வகை அரசியல் இன்றைக்கு வலியுறுத்தி வருகிறது.வரலாற்றில், உலகில் எந்த ராணுவத்திலும் சாமியார்களுக்கென்று பதவி இருக்கவில்லை. போர்க்களங்களில் ராணுவம் பயன்படுத்துகின்ற பிரச்சாரத்தில் பொய்மை என்பது ஒருங்கிணைந்ததாகவே இருக்கிறது. பொய்யை உண்மை என்பது போல சொல்கிற கலையாகவே பிரச்சாரம்என்பது இருக்கிறது. ஆதித்யநாத் சொல்வதைப் போலஇந்திய ராணுவமானது இப்போது ‘மோடியின் படை’என்பதாகவே இருக்கிறது. அந்த அளவிற்கு ராணுவத்தின்மீதும் கண்மூடித்தனமான நம்பிக்கையை வைப்பது அவசியம் என்பதாக இப்போதைய நிலைமை மாறியிருக்கிறது. இந்திய ராணுவம் சுதந்திரமாகச் செயல்படுவதை இந்தஅளவிற்கு, மோடி இப்போது செய்திருப்பதைப்போல, இந்திய வரலாற்றில் இதுவரையிலும்எந்தவொரு அரசாங்கமும் மறுத்து சமரசம் செய்து கொள்ளவில்லை. ராணுவம் என்பதை ஒரு கட்சியுடன் இணைந்த அமைப்பு போன்ற தோற்றத்தைப் பரப்புவது இந்த நாட்டிற்கு செய்யும் மிகப் பயங்கரமான கெடுதியான செயலாகும்.

ஒருவரை ரட்சிக்கின்ற மதம் மற்றும் அரசியல் ஆகியவற்றிற்கு இடையிலான மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால், ‘இங்கே… இப்போது…’ என்கிற அளவில் மட்டுமே அரசியல் தன்னுடைய கவனத்தைச்  செலுத்துகின்றது. ஆனால் மதமோ மக்களின் முன்பாக தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும் வேதனை, துன்பங்களிலிருந்து அவர்களுடைய கவனத்தை கிடைக்கவிருக்கும் வெகுமதிகள் பக்கம் திசை திருப்புவதாக இருக்கிறது. “குறுகிய காலத்திற்கான வலி, நீண்ட காலத்திற்கான ஆதாயம்” என்பதாக மோடி முன்வைக்கின்ற இந்த இழிந்த வடிவம் இருக்கின்றது.பணமதிப்பு நீக்க அறிவிப்பு பல தியாகிகளை உருவாக்கியது. பாம்பு போன்று நீண்ட முடிவற்ற வரிசைகளில் நின்ற சக இந்தியர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். அந்த மக்களுக்காக ‘இறப்பவர்களுக்காக வானில் உணவு காத்திருக்கிறது’ என்று கூறப்பட்டதால், அது எந்த கோபத்தையும் அவர்களிடம் ஏற்படுத்தவில்லை. இந்த பச்சைப் பொய்யை நம்பி ஏழை மக்கள் எவ்வளவு ஆவலோடு காத்திருந்தார்கள்? ‘நீண்ட காலம் கழித்து கிடைக்கப் போகின்ற மிகப் பெரியஆதாயத்தை’ காண்பதற்காக தாங்கள் உயிர் வாழ வேண்டுமென்பதை அவர்கள் உண்மையில் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் நம்பினார்கள்? அந்த நீண்ட காலம் கழித்துகிடைக்கப் போகின்ற, ஆனால் எங்கும் காணப்படாத அந்த ஆதாயத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட  மோடி பேசவில்லை, அது குறித்து யாருக்கும் எந்த விளக்கமும் அவர் சொல்லவும் போவதில்லை.

செல்வந்தர்கள், வலிமை வாய்ந்தவர்கள் போன்றவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு போலித்தனமாக மதத்தைப் பரப்புபவர்களின் கண்டுபிடிப்பாகவே இந்த ‘இறப்பவர்களுக்காக வானில் உணவு காத்திருக்கிறது’ என்று சொல்கின்ற மதம் உள்ளது. ‘இறப்பவர்களுக்காக வானில் உணவு காத்திருக்கிறது’ என்பதை கார்ப்பரேட் பெருநிறுவனத்தைச் சார்ந்தவரிடம் யாரும் சொல்ல முடியாது. ஒருவேளை உங்கள் மீது தன்னுடைய ஜெர்மன் ஷெப்பார்டுநாய்களை ஏவி விடாமல் இருந்தால், உங்களைக் கண்டுஅவர் நகைப்பார். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வலி குறுகியகாலத்திற்கானதா அல்லது நீண்ட காலத்திற்கானதா என்பது பற்றியெல்லாம் அவருக்கு கவலை இல்லை. அது குறுகிய காலத்திற்கோ அல்லது நீண்ட காலத்திற்கோ என்று பார்க்காமல், ஆதாயங்களைப் பெறும் வரை அவர் சந்தோஷமாக இருப்பார். மிகச் சாதாரண மனிதனின் வலிகள் மிகப் பெரிய நிறுவனங்களின் ஆதாயமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது இப்போது தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவில் உலா வருகின்ற விசித்திரக் கதைகளில் வருவதைப் போல, கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகஅளவில் அதிகரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது என்றாலும், ஏழைகள் இன்னும் தங்களுடைய வலிகளிலிருந்து மீளவில்லை என்பதே உண்மை.மதத்தைப் பொறுத்தவரை இன்று வரையிலும் இந்திய மக்களுக்கு மோடி அளித்திருக்கும் அனைத்து வாக்குறுதிகளும் புத்திசாலித்தனமானவையாகவே இருக்கின்றன. ஆனால் கொள்கை கொண்ட அரசியலைப்பொறுத்தவரை அவை மிகுந்த அபத்தமானவையாக உள்ளன. இதை சரியான பார்வையில் பார்ப்பதற்கு பிறவழக்கமான மதங்களில் உள்ள அற்புதங்களை நிகழ்த்துகிறவர்கள் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். மந்திரவாதியிடம் அல்லது அற்புதங்களை நிகழ்த்துபவரிடம் சென்றால், அவர் உங்களுடைய நோயை நிச்சயம்குணப்படுத்துவதாக வாக்களிப்பார். 

வாக்குறுதியளிக்கப்பட்ட அந்த அதிசயம் நடக்காத போதிலும், அந்த கடவுள் மனிதர், தான் ஏமாற்றவில்லை என்றே உங்களிடம் கூறுவார். மாறாக அந்த அதிசயம் நடக்காமல் போனதற்கு உங்களுடைய நம்பிக்கையின்மை அல்லது உங்களைச் சுற்றியிருக்கின்ற கெட்ட நம்பிக்கைகளே காரணம் என்று உங்கள் மீதே அவர் குற்றம் சுமத்துவார். தற்போது நிலவுகின்ற நிலைமை அதை ஒத்ததாகவே இருக்கிறது. தன்னுடைய வாக்குறுதிகளை மோடியால் நிறைவேற்ற முடியவில்லை என்றால், அதற்கு எதிர்க்கட்சிகளே காரணம் அல்லது மூன்றில் இரண்டு பங்குபெரும்பான்மையை வாக்காளர்கள் தனக்கு வழங்கவில்லை என்பதே காரணம் என்று கூறினார்கள். மிகச் சாதாரண பெரும்பான்மையுடன் பிரதமர் ஒருவரால் எப்படிசாதிக்க முடியும் என்று கேட்டார்கள்.மதத்தின் மேதைமை ஜனநாயகத்தின் ஆன்மாவிற்கு முற்றிலும் எதிரானது. எந்தவொரு கடவுளும் ஜனநாயகவாதியாக இருப்பதில்லை; ஏன் ஒரு சின்ன பூசாரி கூட அவ்வாறு இருப்பதில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த வட்டத்திற்குள் மிகுந்த ஆற்றல் மிக்கவர்களாகவே இருக்கின்றனர். மோடி மற்றும் ஷா ஆகியோரால் நிலைநாட்டப்பட்டிருக்கின்ற செயல்பாடுகளை குடிமக்கள்மற்றும் வாக்காளர்களாகிய நாம் ஏற்றுக் கொள்வோமேயானால், அது இந்திய ஜனநாயகப் படுகொலைக்கு உதவுகின்ற செயலாகவே இருக்கும்.

மதம், கலாச்சாரம், இனம், மொழி ஆகியவற்றின் பன்முகத்தன்மையால் வேறுபடுகின்ற உண்மையான, துடிப்பான, தனித்துவமான அரசியல் சக்தியாக இந்தியாதிகழ்கிறது. சகிப்பற்ற தன்மை கொண்ட மனோபாவத்துடன் இருக்கின்ற சர்வாதிகார அரசு தன்னுடைய மிருகத்தனமான சக்தி கொண்டு அனைத்து வகைகளிலும் ஒருமுகத்தன்மையை திணிக்கவே முயலுகிறது. நாம் இதற்கு முன்னர் பார்த்திராத ரத்தம் தோய்ந்த, அராஜகம் நிறைந்த நிலைக்குள் இந்தியாவைத் தள்ளுவதில் அதுஉறுதியாக உள்ளது. இது ஒன்றும் வெறும் ஊகத்தின் அடிப்படையில் சொல்லப்படுவதாக இல்லை. தற்போதைய போக்குகள் மற்றும் நடப்புகளைக் காண்கின்ற போது, இத்தகைய விளைவுகளையே நம்மால் எதிர்பார்க்க முடியும்.இந்திய சுதந்திரத்திற்கும், இறையாண்மை கொண்ட குடியரசாக இந்தியா மலர்வதற்கும் கடுமையாகப் போராடியதலைமுறையைச் சார்ந்தவன் நான். சகிப்புத்தன்மை, பரஸ்பர மரியாதை ஆகியவற்றைக் கொண்ட கலாச்சாரத்தின் மூலம் சகிப்புத்தன்மை மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வலுவான தேசமாக இந்தியா மென்மேலும் வளரும் என்று 1947இல் உருவான நம்பிக்கைகளும், ஆசைகளும் நிறைவேறும் என்றே நாங்கள் நம்பினோம். ஒரு இந்து தேசமாக இந்தியா மரித்துப் போவதை கனவிலும்கூட எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

அவ்வாறு பெற்ற சுதந்திரம் இப்பொழுது தேர்ச்சக்கரங்களின் கீழ் சிக்கிக் கொண்டுள்ளது.  இந்த தேசியபேரழிவைத் தகர்த்தெறிவதற்காக இந்தியா முழுவதிலுமுள்ள  சகோதரிகளையும் சகோதரர்களையும் ஒருங்கிணைப்பதற்கான  கடமைகளில் ஒருவேளை நாம் தோல்வியடைந்தால், கடந்த பல்லாண்டுகளாக போராடி வந்த அனைத்தையும் குறைத்து மதிப்பிடுவதாகவே இருக்கும்.கடற்கரை மணல் கொண்டு அமைக்கப்பட்ட அரண்மனைகளைப் போன்று தங்களுடைய சிறிய லாபங்களுக்காக மிகப் பயங்கரமான கொடூரத்தையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தி நமது நாடு எனும் புனித ஆலயத்தை அழித்தொழிக்க முயல்கின்ற சக்திகளுக்கு எதிராக பாலினம், வயது, கலாச்சாரம், மதம், பிராந்தியம், மொழி என்று அனைத்தையும் கடந்து நாட்டு மக்கள் அனைவரும் மிகப் பெரிய அரணை உயர்த்தி எழுப்பி ஒன்றிணையவேண்டும். 

கட்டுரையாளர்: தலைவர் ஆரிய சமாஜம், ஆன்மீகத் தலைவர், சமூக சீர்திருத்தவாதி
தமிழில்: பேரா.தா.சந்திரஎகுரு

;