தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மருத்துவர் கபீல் கானை விடுக்க யோகி ஆதித்யநாத் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோரக்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2017ம் ஆண்டு ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் சுமார் 60 குழந்தைகள் உயிரிழந்தனர். அங்கு மருத்துவராக பணியாற்றிய கபீல் கான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசினார் என குற்றம் சாட்டி அவர் மதுரா சிறையில் அடைக்கப்பட்டார். அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது சட்டத்திற்கு விரோதமானது என அவரது மனைவி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின் போது இன்று அவரை உடனடியாக யோகி அரசு விடுவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.