ஹத்ராஸ் வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியேற விடாமல் யோகி அரசு கட்டுப்படுத்தி உள்ள சூழலில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பட்டியலினப்பெண்ணை ஆதிக்க சாதியைச் சேர்ந்த 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கடுமையாக தாக்கினர். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உத்தரபிரதேச காவல்துறையினர் உயிரிழந்த பெண்ணின் சடலத்திற்கு இறுதி சடங்குகள் கூட செய்ய விடாமல் இரவோடு இரவாக தகனம் செய்தனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை வெளியே செல்ல விடாமல் தடுத்து காவல் துறையினர் தடுப்பதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். இந்நிலையில் அகில் பாரதிய வால்மீகி மகாபஞ்சாயத் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்து. இதுகுறித்து அந்த அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் சுரேந்தர் குமார் கூறியதாவது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தொலைபேசியில் கொடுத்த தகவலின் பேரில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. என்றார்.
அந்த மனுவில் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினரின் அடிப்படை உரிமையான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறும் வகையில் ஹத்ராஸ் மாவட்ட நிர்வாகத்தின் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.