உத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற மறுத்த 15 வயது சிறுமி எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் யோகி அதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ஹத்ராஸ் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு சாதகமாக அரசு இயந்திரம் செயல்பட்டது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானது.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் புலந்த்சர் பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். இந்த புகார் அடிப்படையில் ஹரீஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஹரீஷ்ன் உறவினர்கள் புகாரை திரும்பப்பெறுமாறு சிறுமியின் குடும்பத்தை தொடர்ந்து வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹரீஷ்ன் குடும்பத்தினர் 5 பேர் இன்று காலை சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சூழலில் அங்கு சென்று வழக்கை திரும்பப்பெறுமாறு மிரட்டி உள்ளனர். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரது உடலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 65 சதவிகித தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சிறுமி இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறுமி அளித்த மரண வாக்குமூலத்தில் சஞ்சய் என்ற நபரை சுட்டிக்காட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியை எரித்து கொலை செய்தவர்கள் மீது, உயிரிழந்த பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.