டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் தெக்ரி மாவட்டத்திற்கு உட்பட்ட னைன்பாக் டெக்சில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திரதாஸ் (23). தலித் இளைஞரான இவர், கார்பெண்டர் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி இரவு, ஷிர்கோட் கிராமத்தில் நடைப்பெற்ற தனது தூரத்து உறவினரின் திருமண விருந்தில் ஜிதேந்திர தாஸ் கலந்து கொண்டுள்ளார். இந்த விருந்தின்போது, ஆதிக்க சாதியினருக்கு என்று தனியாக ஒரு இடத்தில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு பரிமாறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பாகுபாட்டை அறியாத தலித் இளைஞர் ஜிதேந்திரதாஸ் ஆதிக்க சாதியினருக்கான பகுதியில் சேரில் அமர்ந்து உணவு உண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த, சாதி ஆதிக்க வெறியர்கள், ஒரு தலித் இளைஞன் எவ்வாறு தங்கள் முன்பு இருக்கையில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று கூறி, ஜிதேந்திரதாசை ‘தரதர’வென வெளியே இழுத்து வந்து கூட்டமாக சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் ஜிதேந்திரதாஸ் படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் மயங்கிய நிலையிலேயே தட்டுத்தடுமாறி, தனது வீட்டிற்கு நள்ளிரவில் வந்தவர், யாரையும் அழைக்காமல், வீட்டு வாசலிலேயே படுத்து விட்டார்.
காலையில், தன் மகன் வாசலில் கிடப்பதைப் பார்த்த ஜிதேந்திரதாசின் தாயார், தொட்டு உசுப்பியுள்ளார். அப்போதுதான் தன்மகன் தாக்கப்பட்டு, சுயநினைவின்றி கிடக்கிறான் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் உள்ளூரில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், முதலுதவி சிசிச்சைக்கு பிறகு டேராடூனில் உள்ள ஸ்ரீமகான் இந்த்ரேஷ் மருத்துவமனையிலும் ஜிதேந்திர தாசை சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 28-ஆம் தேதி ஜிதேந்திர தாஸ் உயிரிழந்துள்ளார்.இதனால் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்த ஜிதேந்திர தாசின் உறவினர்கள், ஜிதேந்திர தாஸ் உடல் வைக்கப்பட்டிருந்த பிணவறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு, பாஜக முதல்வர் வீட்டுக்கு ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.
எனினும், ஜிதேந்திர தாஸ் கொலையில் சம்பந்தப்பட்ட ஒருவரைக் கூட போலீசார் கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
“எங்களுடன் சரிக்கு சமமாக உட்கார்ந்து சாப்பிடுவாயா? என்று சொல்லிச் சொல்லியே ஆதிக்க சாதியினர், எனது சகோதரனை அடித்துக் கொன்றுவிட்டனர். என் சகோதரன்தான், சம்பாதித்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றி வந்தான். இப்போது அவனை நாங்கள் இழந்துவிட்டோம்; இப்போது, வழக்கையும் வாபஸ் பெறுமாறு தொடர்ந்து மிரட்டுகிறார்கள்” என்று ஜிதேந்திர தாசின் சகோதரி பூஜா கூறியுள்ளார்.
ஜிதேந்திர தாஸ் கொல்லப்பட்ட சம்பவத்தில் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று னைன்பாக் டெக்சிலின் ஊராட்சி உறுப்பினர்களில் ஒருவரான சந்தீப் கன்னாவும் குற்றம் சாட்டியுள்hர். போலீசார் இந்த வழக்கில் எப்ஐஆர் போட்டதோடு சரி, ஒருவரையும் இதுவரை கைது செய்யவில்லை; ஜிதேந்திர தாசை அடித்துக் கொன்றவர்கள் மீது எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதற்கும் போலீசார் தயாரில்லை; மாறாக, எங்களின் போராட்டத்தைத் தடுப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, னைன்பாக் டெக்சில் பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பும், இதேபோல தலித் இளைஞர் ஒருவரை சாதி ஆதிக்க வெறியர்கள் அடித்துக் கொன்றதாகவும், அந்த வழக்கிலும் குற்றவாளியை இதுவரை போலீஸ் கைது செய்யவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இருக்கையில் உட்கார்ந்ததற்காக தலித் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் வருகின்றனர்.ஜிதேந்தர் தாஸ் கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் தற்போது 7 பேர் மீது எஸ்சி - எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.