ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் வாடும் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அரசியல் அமர்வு தெளிவான தீர்ப்பு வழங்கிய பின்னணியில், இம்மனுவை தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளது. இந்நிலையில் இவர்கள் விடுதலை தொடர்பாக தற்போது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. ஏழு பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், இதுகுறித்து ஆளுனருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக அமைச்சரவை இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியும், மோடி அரசின் முட்டுக்கட்டை காரணமாக ஆளுனர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
எனவே, இனியும் தாமதிக்காமல் உடனடியாக கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உரிய அழுத்தத்தை ஆளுனருக்கு தர வேண்டுமென்றும், ஆளுனரும் ஏற்கெனவே தமிழக அரசு செய்த பரிந்துரையின் அடிப்படையில் இவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் சிபிஐ(எம்) மாநில செயற்குழு வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.