tamilnadu

img

ஜம்மு - காஷ்மீரில் தடையை உடனடியாக நீக்க முடியாது

புதுதில்லி,ஆக.13- ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அங்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை எல்லாம் உடனடியாக நீக்க முடியாது என்றும் அதுவரை உயிர்கள் பலியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம்  தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களிடம் கருத்து கேட்காமல் மத்திய பாஜக அரசு அராஜகமாக அந்த மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.  ஜம்மு-காஷ்மீரில் பல பகுதிகளில் போலீசாரின் 144-விதியின் கீழான தடை உத்தரவு, கைபேசி இணைப்பு, இன்டர்நெட், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள இந்த தடைகளை எல்லாம் நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெஹ்சீன் பூனாவல்லா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எம்.ஆர்.ஷா, அஜய் ரஸ்டோகி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு செவ்வாயன்று நடைபெற்றது.

அரசுதரப்பில் ஆஜராகி வாதாடிய அட்டார்னி ஜெனரல், காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு பயங்கரவாதி புர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்ட போது அங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருந்ததாகவும்  தற்போது அதுபோல் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாதவாறு அங்குள்ள நிலைமைகளை மத்திய அரசு தினந்தோறும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றது. அங்கு   சட்டம்-ஒழுங்கை முதலில் சீரமைக்க வேண்டியுள்ளது. இதற்காகத்தான் அரசு சில தடைகளை விதித்துள்ளது என அவர் குறிப்பிட்டார். இதைதொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் மிகவும் உணர்ச்சிமயமானது. அங்கு இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு சற்று அவகாசம் அளித்தாக வேண்டும். தடையை   உடனடியாக நீக்க முடியாது.  அதுவரை உயிர்கள் பலியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.  இரு வார காலம் அவகாசம் அளித்து இவ்வழக்கின் மறுவிசார ணையை ஒத்திவைத்தனர்.